Saturday, August 22, 2009

பிரியவாதினி - பூரம் சத்தியமூர்த்தி

79 வயதாகும்   பூரம் சத்தியமூர்த்தி  அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். கலாரசனை மிக்கவர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வருகிறார். (அவர் சொல்லச் சொல்ல நண்பர்கள் எழுதி வருகின்றனர்). 1960களில் எழுதி அவர் பரிசு பெற்ற சிறுகதைகளுள் ஒன்று இங்கே...
அவரைப் பற்றிய விவரங்கள் இங்கே...
 
- - - - - **********************************************************************************
பிரியவாதினி
பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையில் நந்திமலைச் சாரலில் வசந்த காலத்தில் ஒருநாள் காலை நேரம்! அங்கே பாறையைப் பின்னணியாகக் கொண்டு நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்மேடையில் ஒருபுறம் பதினைந்து இளங்குமரிகள் நடன உடை தரித்து அஞ்சலி முத்திரையுடன் கண்களை மூடித் தியானத்தபடி நாட்டியத்திற்குச் சித்தமாக நின்றார்கள்! இன்னொருபுறம் பதினைந்து இளங்குமாரர்கள் அதே போல் சித்தமாக நின்றார்கள்! அவர்களுக்கெதிரே ஆசனம் போன்று அமைந்து ஒரு பாறை மேல் மதங்க முனிவர் தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறத்தில் தரையில் நான்கு இளம்பெண்கள் இசைக்கருவிகளுக்கு ஸ்ருதி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு வலது புறத்திலே சில பார்வையாளர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிலே இரண்டு இளைஞர்கள் புதுமுகங்களாகத் தென்பட்டார்கள்!

யாழின் மெல்லிய இசை ஸ்ருதியை இழைத்தது.

மதங்கதேவர் ஒரு ஜதிஸ்வரத்தைப் பாடத் தொடங்கினார்.

‘ஸா, தாபாம கா ப ரிக பாம கரீ
கரீ ஸாரிஸா தத ஸா ரீ கா பா பதரீஸா
ஸா ரி கா பபத ரி....'

அந்த வித்யார்த்திகள் மிகவும் சுறுசுறுப்பாக தாளக்கட்டு விடாமல் நடனம் செய்தார்கள்!

பெண்கள் பகுதியில் முன்னால் நின்றிருந்த ஓர் அழகிய இளங்குமரி மிகச்சிறப்பாக ஆடி அடவுகளைத் தெளிவாக அபிநயித்தாள்! சிலர் தவறு செய்யும் பொழுது மதங்கர் இடைமறித்து, அந்தப் பெண்ணை மறுபடி ஆடச் செய்து மற்ற வித்யார்த்திகளும் அதைக் காணும்படிச் செய்தார். இதற்குப் பிறகு சில சித்தர் பாடல்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக அபிநயித்துக் காட்டினார்கள்.

இப்படி அந்த நடனப்பயிற்சி ஏறத்தாழ ஆறு நாழிகைகள் நடைப்பெற்றன. பின்னர் அது முடிந்ததற்கு ஆசார்யர் ‘சமிக்ஞை' செய்யவே வித்யார்திகள் ஒவ்வொருவரும் வந்து தனித்தனியாக அவரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பெண்களின் முதன்மையாக நின்ற அந்த இளம்பெண் மிகவும் அடக்கத்துடன் ஆசார்யர் முன் வந்து வணங்கி எழுந்து விநயமாகத் தெரிவித்தாள்!

‘ஆசார்யதேவரே! தங்களை நமஸ்கரிக்க இரண்டு புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்!'

மதங்கர் கண்களைத் திறந்து பார்த்தார்.

அந்த இரண்டு இளைஞர்களும் முன்னால் வந்து சில பழங்களை அவர் முன் ஒரு தட்டில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ‘அபிவாதநம்' சொன்னார்கள்.

‘ஆசார்யதேவா! நாங்கள் இருவரும் பல்லவ நாட்டைச் சேர்ந்தவர்கள்!.. காஞ்சிக்கு அருகே உள்ள ஸ்ரீபுரத்திலிருந்து வருகிறோம்!... என் பெயர் ‘குணசேனன்'. இவன் என் நண்பன் ‘வித்யாதரன்'! நாங்கள் இருவரும் காஞ்சியில் சிலகாலம் நடனமும், இசையும் பயின்றவர்கள்... இந்தக் கலையை விருத்தி செய்து கொள்வதற்காக தங்கள் திருவடியை தஞ்சம் அடைந்திருக்கிறோம்... எங்களுக்கு அநுக்ரஹிக்க வேணும்!...'

‘நீங்கள் இருவரும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்?..'

‘ஸ்வாமி... நாங்கள் இருவரும் க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.. அடியேன் கொஞ்சம் ‘சாமகானம்' ‘அத்யயனம்' செய்திருக்கிறேன்.

‘மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் எந்த ஆசாரியரிடம் நடனமும் இசையும் பயின்றீர்கள்...'

‘குலபதி ஆசார்யர் ருத்ராசாரியாரிடம் பயின்றிருக்கிறோம்..'

‘ஆஹா... அவரிடம் தான் அடியேன் சிறுவயதிலே பாடம் பயின்றேன். அவருடைய ஆக்ஞையின் பேரில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்திமலைச் சாரலில் குருகுலத்தை அமைத்துக் கொண்டேன். அவர்தான் எப்பேர்பட்ட மகாபுருஷர்... அவர் சுகமாக இருக்கிறாரா?...

‘ஸ்வாமி, அவர் ‘காலகதி' அடைந்து இரண்டாண்டுகள் ஆகி விட்டன. அவர் தான் கடைசித் தறுவாயில் தங்கள் பெயரைச் சொல்லி, தங்களிடம் எங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுமாறு பணித்தார்.'

'அப்படியா, நீங்கள் இருவரும் குருகுலத்திலே தங்கிப் பாடம் கேட்கலாம்'

இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

‘தீர்காயுஸ்மான் பவா!.. பிரியவாதினி இந்த பிரம்மச்சாரிகளை நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாயாக!..”

'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று அந்த இளநங்கை நமஸ்கரித்து எழுந்தாள்.

பிரியவாதினி அந்த இரண்டு இளைஞர்களையும் மிகவும் பணிவுடன் அழைத்துச் சென்றாள். அந்த இடத்திலிருந்து அரை நாழிகை தொலைவில் மதங்கருடைய ஆஸ்ரமம் தென்பட்டது. அதை ஒட்டி பல குடில்கள் இருந்தன. ஒருபுறம் இளங்குமரர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இளம்பெண்களோடு சற்று வயது முதிர்ந்த தாதிமார்களும் பலவித அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அகன்று பரந்த ஆஸ்ரமத்திலே அமைந்த நடுமுற்றத்தில் ‘ கார்ஹ பத்ய', ‘ஆன்வாஹார்யபசன', ‘ஆஹவனீய' ஆகிய மூன்று அக்னிகுண்டங்கள் லேசாகப் புகையை எழுப்பிக் கொண்டிருந்தன. வேதம் பயிலும் வித்யார்த்திகள் சிலர் அந்த அக்னியிலே ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பின்புறத்தில் பசுக்கள் கட்டப்பட்ட கொட்டில்களில் சில பிரம்மச்சாரிகள் பசுக்களை பராமரித்தார்கள். பெண்கள் பகுதியில் ஒரு பகுதியினர் பகல் உணவிற்காக பழங்களையும், காய்கறிகளையும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தாதிமார்கள் பெண்களுக்கு அலங்காரம் செய்வதிலும், நகைகளை எடுத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

குணசேனையும், வித்யாதரனையும் பிரியவாதினி மிகவும் பணிவுடன் ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘ஸ்வாமி.. நீங்கள் இருவரும் இந்தக் குடிலில் தங்கிக் கொள்ளலாம்.. அங்கே ஒரு மண் பானையில் சுத்தமான நீர் இருக்கிறது. உங்கள் இருவருக்கும் எது தேவையானாலும் என்னிடம் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த அடியவள் அதை நிறைவேற்றக் காத்திருப்பாள்.'

குணசேனன் அவளுடைய பணிவையும் ‘அதிதி சத்கார'த்தையும் கண்டு மிகவும் வியந்து போனான். ‘பிரியவாதினி மிகவும் நன்றி'...

அப்போதுதான் குணசேனன் அவளுடைய அழகிய முகத்தை நேருக்கு நேர் கண்டான். ‘ஆஹா, இவள் தான் எவ்வளவு அழகிய பொற்கொடியாக இருக்கிறாள்! இவளுடைய அங்க அசைவும், சொல்லழகும் தான் எவ்வளவு நளினமாக இருக்கின்றன!'

‘.... தங்களுக்குத் தேவையான நடன ஆடைகளும் சதங்கைகளும் நான் கொண்டு வந்து தருகிறேன்.. சரியாக பதினைந்து நாழிகைக்கு ஆராதனை முடிந்து ஆரத்தி ஆனபின் ஆசார்ய தேவரோடு எல்லோருக்கும் பிக்க்ஷை அளிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே சித்தமாக வந்து விடலாம்!...'

'பெண்ணே! உன் உபசாரங்களையும் தெளிவான பேச்சையும் கண்டு மிகவும் வியக்கிறேன்... இந்த ஆஸ்ரமமே காளிதாசன் வர்ணித்த கன்வ மகரிஷி ஆஸ்ரமம் போல் காட்சியளிக்கிறது... அங்கே வாழும் சகுந்தலையாக நீ தோன்றுகிறாய்!...'

பிரியவாதினி மெல்லப் புன்னகை புரிந்தாள். அவள் கன்னங்கள் இரண்டிலும் லேசாக செம்மை படர்ந்தது.

(தொடரும்)

No comments: