Monday, April 23, 2012

சில நேரங்களில் சில சந்திப்புகள் - 1


”எப்ப வரட்டும்” என்றேன் தொலைபேசியில்

“காலையில் ஒரு 10 மணிக்கெல்லாம் வந்திடுங்க. அப்புறமா நான் கொஞ்சம் வெளில போக வேண்டியிருக்கு. அதுனால கரெக்டா வந்திருங்க” என்று சொல்லி தெரு, வீட்டின் அடையாளம் சொல்லி போனை வைத்தார்,

மறுநாள் காலை சற்று பதைபதைப்புடன் முன்னதாகவே சென்று, வழி சரியாகத் தெரியாததால் ஆட்டோவில் ஏறி அவர் குறிப்பிட்ட தெருவில் போய் இறங்கினேன். வேகமாகவும் சற்றே பதட்டமாகவும் இருந்ததில் அவர் சொன்ன அடையாளங்களைத் தவற விட்டுவிட்டு தெருவின் முனையில் போய் நின்றேன்.

கைப்பேசியால் அவரை அழைத்தேன்.

“சார் வந்துட்டேன். நீங்க சொன்ன ஸ்ட்ரீட்டோட முனைலதான் இருக்கேன். எப்படி வர்றது?”

“அடடா.. தாண்டிப் போயிட்டீங்க போல.. பின்னாடியே வாங்க. ரெண்டாவது ஃப்ளாட். மாடி. நான் சரியா அடையாளம் சொல்லியிருந்தேனே. நீங்க கவனிக்கலையா?” என்றார். அதில் சற்றே சலிப்பு தெரிந்தது.

வந்தவழியே வந்ததில் மாடியில் அவர் தெரிந்தார். ”மேல வாப்பா” என்றார்.

விரைந்தேறுவதற்குள் வாசல் கதவைத் திறந்து நின்று கொண்டிருந்தார்.

“சாரி” என்று நான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், “எதிலே வந்தீங்க..” என்றார்.

“ஆட்டோவில்”

“ச்ச்ச்ச்ச்” என்றார்.

”பக்கத்துலதான. பஸ்ல வந்திருக்கலாமே! ஏன் காசை வேஸ்ட் பண்றீங்க..” என்றார்.

அப்போதுதான் அவரை நான் முழுமையாகப் பார்த்தேன்.

மிக ஒல்லியான உடல். வயதின் மூப்பால் தளர்ந்து போயிருந்தது. ஆனாலும் நடையில் ஒரு வேகம் இருந்தது.

அறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். தான் ஒரு மிடறு தண்ணீரை விழுங்கியவர் “இது வெந்நீர்” என்றவாறே, எனக்கு வேறு ஒரு வாட்டர் பாட்டிலைத் தந்தார்.

அந்த பத்துக்குப் பத்து அறை அவரைப் போலவே மிக எளிமையாக இருந்தது. ஒரு சாதாரண நாற்காலி. நீண்ட எழுது மேசை. மூலையில் லேப்-டாப். சுவரில் அன்னை, ரமணர் காலண்டர் படம். மற்றபடி அந்த அறை முழுக்க புத்தகங்கள்... புத்தகங்கள்...

என்னைப் பற்றி விசாரித்தார். ”சம்பளம் போதுமானதா இருக்குதா?” என்றார்.

சொன்னேன்.

”வேற என்ன பண்றீங்க” என்றார்...

சொன்னேன்.

”பரவாயில்லையே!” என்று ஆச்சரியம் காட்டியவர், ”ம்... சொல்லுங்க...” என்றார்

.நான் பேப்பரை வெளியே எடுத்தேன்.

(தொடரும்)