Sunday, August 23, 2009

பிரியவாதினி - 2

2


பகுதி -1

'கிரீஷ்மருது' தொடங்கிய சமயம். மதங்க முனிவர் பகல் உணவிற்குப் பிறகு இருபது நாழிகையளவில் வழக்கம் போல தன்னுடைய அறையில் பிரியவாதினிக்கு மட்டும் அவருடைய சங்கீத இலக்கணங்களை விவரிக்கத் தொடங்கினார்.


ஒருகணம் தியானித்தபின், 'பிரியவாதினி அந்த இளைஞன் குணசேனனை இங்கே அழைத்து வா!' என்று பணித்தார்.


'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று சொல்லி துள்ளி எழுந்து பிரியவாதினி வெகு விரைவில் குணசேனனை அழைத்து வந்தாள்.


அவன் வந்து வணங்கி எழுந்ததும் மதங்கர் ஆசிர்வதித்து விட்டு, 'குணசேனா, இன்றுமுதல் பிரியவாதினியோடு சேர்த்து உனக்கும் சங்கீத இலக்கணங்களை விவரிக்க எண்ணுகிறேன். சித்தமாக இருப்பாயா?...'


'காத்திருக்கிறேன் ஸ்வாமி, அடியேன் பாக்கியம்..'


அப்போது பிரியவாதினியின் முகமும் சற்றே மலர்ந்ததை குணசேனன் கவனிக்காமலில்லை.


‘பரத முனிவருடைய இசை இலக்கணம் பல நூற்றாண்டுகளாக அப்படியே காப்பாற்றி வருகிறோமே தவிர அதை ஆராய்ந்து வளர்ச்சியடைவதற்கு யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. அந்தப்பணியை நான் சில வருட காலமாக மேற்கொண்டு சில இலக்கண விரிவாக்கங்களை சூத்திரங்களாக வடமொழிக் கவிதையில் இயற்றினேன். இதைப் பிரியவாதினி மட்டும் சிலகாலமாக என்னிடம் கற்று வருகிறாள். இதை நீயும் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு இந்த இலக்கண அலங்காரங்களைக் கற்றுத்தர ஒப்புக் கொள்வாயல்லவா?...


'தங்கள் ஆக்ஞை ஸ்வாமி..' என்று அடிபணிந்தான் குணசேனன்.


அன்று முதல் ‘ஹேமந்தருது'வின் முடிவு வரை குணசேனனும், பிரியவாதினியும் மட்டும் அந்த இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்து கொண்டார்கள். ஏறத்தாழ ஐந்நூறு ஸ்லோகங்களை இயற்றி முடித்த மதங்கமா முனிவர், இருவரையும் மனதுக்குள்ளே ஆசிர்வதித்தார்.


'ஸ்வாமி! பரதமுனிவர் எழுதிய 18 ‘ஜாதிகளை' 18 ‘ராகங்'கள் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். தங்களூடைய இலக்கண அலங்காரங்கள் மூலம் அவைகள் பதினெட்டாயிரமாகப் பெருகி வளர முடியும். இதில் துருவகானத்தில் உள்ள அலங்காரங்களை தங்கள் இலக்கணப்படி இந்த அடியவள் ஒரு தமிழ்ச் செய்யுளாக தங்கள் கிருபையால் இயற்ற முடிந்திருக்கிறது. இந்தச் செய்யுளை வித்யார்த்திகளுக்கு கற்றுக் கொடுப்பது சுலபமாக இருக்குமல்லவா?...' என்று கேட்டாள் பிரியவாதினி ஒருநாள்.


‘ஆமாம். இங்கே அநேக தமிழ்ப்புலவர்கள் இசை கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.'


‘அந்தச் செய்யுளகளை தங்கள் முன் பாடிக்காட்டலாமா?'


குணசேனனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


பிரியவாதினி அந்தச் செய்யுளைப் பாடினாள்.


‘மிகவும் நன்றாக இருக்கிறது. இதை இனி வித்யார்த்திகளுக்கு நீ கற்றுத் தரலாம்!..'


குணசேனன் அடிபணிந்து, ஸ்வாமி! அடியேனும் இதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.. அடியேனுக்கு தமிழ்ச் செய்யுள் இயற்றும் புலமை இல்லை. ஆனால் வடமொழியில் கவிதை எழுதுவேன். பிரியவாதினியின் தமிழ்ப்புலமையைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைகிறேன்...' என்றான் குணசேனன்.


‘குணசேனா!.. அவள் ஒரு தமிழ்ப்புலவரின் மகள். அதுமட்டுமல்ல; இங்கே குருகுலத்திற்கு வருகின்ற தமிழ்ப்புலவர்களிடமும் தமிழ்ச்செய்யுள் இயற்றுவதற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள்.. வடமொழி, தமிழ் இரண்டிலுமே இவள் புலமை பெற்றவள்!...'


'அந்தச் செய்யுளை இந்த ஏழைக்கும் கற்றுத்தரும்படி ஆசார்யர் பணிக்க வேண்டும் ஸ்வாமி!'


‘அப்படியே ஆகட்டும்' என்றார் மதங்க தேவர்.


குணசேனனும், பிரியவாதினியும் மதங்க தேவரின் இசை, இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்த பின், ஒருநாள் பிரியவாதினி கேட்டாள்.


'ஸ்வாமி! இந்த வடமொழி இசை இலக்கண சூத்திரங்களுக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டாமா?...'


‘அதைச் செய்யக் கூடிய வல்லமை பெற்றவன் குணசேனன் தான்! அவனே அதற்கு பெயர் சூட்டட்டும்!'


‘ஸ்வாமி, இது மாபெரும் இலக்கியம். இதை வடமொழியில் ‘ப்ருஹத்தேசி' என்று சொல்லலாம் என்றான் குணசேனன்.


மதங்க முனிவர் மெல்லப் புன்னகை புரிந்தார்!
 
(தொடரும்)

No comments: