Monday, August 24, 2009

பிரியவாதினி - 3 & 4

3

‘சிசிரருது' தொடங்கும்போது ஒருநாள் பகலில் பாடத்தை முடித்தவுடன் குணசேனன், ஆசார்யரிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.


‘ஸ்வாமி ஒரு விக்ஞாபனம், அடியேன் ஸ்ரீபுரத்தை விட்டுவந்து வெகுகாலமாகி விட்டது. என்னுடைய வயதான தாய், தந்தையர் என்னைக் காண ஆவலுடன் இருப்பார்கள். தங்கள் அனுமதியின் பேரில் நான் ஒரு தடவை என் தாய் தந்தையரை வணங்கி விட்டு ஒரு மாத காலத்தில் திரும்பி வருவதாக யோசனை உதித்திருக்கிறது. தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.'


‘குணசேனா, மங்களம் உண்டாகட்டும். விரைவில் திரும்பிவர வேண்டும்' என்று ஆசிர்வதித்தார் ஆசார்ய தேவர்.


குணசேனன் அன்று மாலையில் குடிலுக்குத் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே சதங்கை ஒலி கேட்டது.


‘பிரியவாதினி, வரவேண்டும்... ஏன் சற்று வாட்டமுற்றிருக்கிறாய்' என்று கேட்டான் குணசேனன்.


‘ஒன்றுமில்லை ஸ்வாமி' என்று சொல்லி பிரியவாதினி சற்று மௌனமாக இருந்தாள்.


‘பிரியவாதினி, நீ எப்போதும் போல மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை'


‘ஸ்வாமி, இந்த ஏழை உங்களிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கலாமா?'


‘நிச்சயமாக, நான் செய்யக் கூடிய உதவி என்ன இருக்கிறது?'


‘ஸ்வாமி, தாங்கள் இப்பொழுது ஸ்ரீபுரத்திற்கு அவசியம் செல்ல வேண்டுமா?' -பிரியவாதினியின் அழகிய விழிகளில் ஆழங்காண முடியாத தாபமும், கவலையும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!


‘ஆமாம். என்னுடைய வயதான தாய், தந்தையர் இவ்வளவு மாதங்களாக என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களைக் கண்டு, ஆசி பெற்று, உடனே திரும்பி விடுவேன்.'


பிரியவாதினி சில கணங்கள் மௌனமாக நின்றாள்.


‘ஸ்வாமி! இந்த ஏழையையும் தாங்கள் அழைத்துச் செல்ல முடியாதா?...' என்று கேட்ட பிரியவாதினி விம்மல்களோடு அவன் காலடியில் விழுந்து வணங்கினாள்.


குணசேனன் பதறிப்போனான்!


‘ஸுகுமாரி!.. நீ வீணாகக் கலங்க வேண்டாம். நான் விரைவில் திரும்பி வருகிறேன்!


அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை படர்ந்தது.


‘ஸ்வாமி! தாங்கள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது!...' என்று விம்மினாள் பிரியவாதினி.


‘ நானும் உன்னை விட்டு பிரிய விரும்பவே இல்லை. இப்போது நீ எனக்கு விடை கொடு, விரைவில் நான் திரும்பி வருகிறேன்' என்றான் குணசேனன்.



4



‘ சிசிரருது' முடிந்து ‘வசந்தருது' தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் மாலைவேலையில் பிரியவாதினி ராஜபாட்டையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்! இரண்டு மாதங்கள் ஆகியும் குணசேனனைக் காணவில்லை! குணசேனனின் நண்பன் வித்யாதரனும் அனுமதி பெற்று ஸ்ரீபுரம் போயிருந்தான்! இவர்களைப் பற்றிய விவரம் யாரிடம் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை!


இப்படிப்பல மாதங்களாகியும் குணசேனன் திரும்பி வரவில்லை. இந்த வருடம் வசந்த ருதுவின் தொடக்கத்தில் பல்லவச் சக்கரவர்த்தியிடமிருந்து மதங்க முனிவருக்கு ஓர் அழைப்போலை வந்தது. காஞ்சித் தலைநகரில் நடனக் கலை விழா ஏற்பாடாகியிருப்பதாகவும், மதங்க முனிவர் தன் நடன கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சக்ரவர்த்தி அழைப்பு விடுத்திருந்தார். வைகாசி மாதத் தொடக்கத்தில் சக்கரவர்த்தி தேர்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.


செய்தி கேட்டு பிரியவாதினி சற்றே தெளிவடைந்தாள்.


‘காஞ்சித்தலைநகருக்குப் போனால் அதற்கருகே உள்ள ஸ்ரீபுரத்தில் குணசேனனை சந்திக்க இயலுமல்லவா?, அப்படியே குணசேனனும் அந்த நடன நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா?'


வைகாசி மாதத்தில் தேர்கள் வந்து விட்டன. காஞ்சிக்குக் கிளம்பும் முன் பிரியவாதினி ஆச்சார்யரை அடிபணிந்து ‘ஸ்வாமி! என்னுடைய அந்தரங்கத்தை தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!... அந்த குணசேனன் இன்னும் திரும்பி வரவில்லை. அவரில்லாமல் என்னால் வாழ முடியாது என்றே தோன்றுகிறது!.. இப்போது நாம் செல்லும் போது ஸ்ரீபுரத்தில் அவரைப் பற்றி விசாரித்து வர தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விம்மினாள்'


‘பிரியவாதினி!.. நானே அதை மனதில் நினைத்திருக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!..' என்றார் மதங்க முனிவர்.


காஞ்சி அரண்மனையில் நடனக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் மதங்க முனிவருக்கும், அவருடைய சிஷ்யர்களுக்கும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார். அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் நன்றாக உபசரித்து, பணிவிடை செய்யக் காத்திருந்தார்கள்.


பிரியவாதினியின் மனம், எப்பொழுதும் ஸ்ரீபுரத்தில் உள்ள குணசேனனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.


கலை நிகழ்ச்சிகள் தொடங்கிய முதல் நாள் பிரியவாதினி நடனமாடிய போது அவளுடைய கண்கள் மக்கள் கூட்டம் நிரம்பிய அந்த மண்டபத்திலும், மற்ற காஞ்சிநகர் கலைஞர்கள் மத்தியிலும் குணசேனனையே தேடி அலைந்தன. பத்து நாட்கள் நடந்த வசந்த விழாவிலே பத்துநாட்களும் சக்கரவர்த்தியும் பட்டமகிஷியும் சபையில் வந்தமர்ந்து நடனங்களை ரசித்தார்கள். பிரியவாதினிக்கு ஏக்கம் தான் மிஞ்சிற்று!


மதங்கர் இரண்டு சீடர்களை ஸ்ரீபுரத்திற்கு அனுப்பி குணசேனனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.


இந்த விழாக்களின் கடைசிநாளில் மதங்க முனிவருக்கு பல்லவச் சக்கரவர்த்தி சன்மானங்கள் கொடுத்து விசேஷமாய் கௌரவித்ததோடு அவருடைய சிஷ்யர்கள் யாவருக்கும் தனித்தனியாக பரிசுப் பட்டாடைகளையும், பொற்கிழிகளையும் வழங்கினார். ஆனால் அப்போது பிரியவாதினியை மட்டும் காணவில்லை.


மதங்க தேவர் அரண்மனை விடுதிக்குத் திரும்பியதும் மிகவும் கவலையுற்றவராய் பிரியவாதினியைத் தேடி அழைத்து வருவதற்கு சீடர்களை அனுப்பினார்.


எங்கு தேடியும் பிரியவாதினி அகப்படவில்லை.


(தொடரும்)



No comments: