Monday, August 31, 2009

ஜே.கே சில குறிப்புகள்

தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். பாரதி, புதுமைப்பித்தன் இவர்களின் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை.



ஜெயகாந்தன் காலம் என்று தனித்து குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவரது படைப்புகள் தமிழ் இலக்கியப் பரப்பில் ஆணித்தரமாக தனது இருப்பைப் பறைசாற்றின. 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர் ஜே.கே என தமிழ் வாசகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஜெயகாந்தன். 76 வயதான ஜே.கே, தமிழ் இலக்கியப் பரப்பின் தனித்த ஓர் சாதனையாளர் என்றால் அது மிகையில்லை.



 
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன், ஐந்தாம் வகுப்பு வரையே கல்வி பயின்றார். வீட்டுச்சூழல் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய இவருக்கு இவரது மாமா உறுதுணையாக இருந்தார். விழுப்புரத்தில் தன் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். மாமா கம்யூனிசக் கொள்கைகளில் மிக்க ஆர்வமுடையவர். அவர் மூலம் ஜே.கேவுக்கு பாரதியும், கம்யூனிச சித்தாந்தங்களும் அறிமுகமானது. அதன் பின் அவரது வாழ்கைப் பயணம் புதிய பாதையில் அடிபோடத் தொடங்கியது.



 
ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலகத்தில் - அச்சகத்தில் பணிப்புரிந்தும், ஜனசக்தி பத்திரிக்கைகளை விற்றும் கழித்தார். ஆனால் 1949-ஆம் ஆண்டு சி.பி.ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டது. ஆதலால், அவர் சில மாதங்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணி புரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை, அவர் வாழ்க்கையில் முக்கிய கால கட்டமாக அமைந்தது. சிந்திக்கவும் எழுதவும் நேரம் கிடைத்தது.



 
ஜெயகாந்தன் பாரம்பரிய எழுத்தாளர் பரம்பரையில் இருந்து வந்தவர் அல்ல. திட்டமிட்டு இலக்கிய உலகில் புகுந்து சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்டவரும் அல்ல. அவரது வாழ்க்கை அனுபவங்களே அவரது படைப்பாக்கமாகப் பரிணமித்தது. அவரது இலக்கிய வாழ்க்கை 1950-களில் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன் போன்ற பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகத் துவங்கின.



 
கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஜெயகாந்தன் பற்றுக் கொண்டிருந்தார் என்றாலும் உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், சி.பி.ஐ-யிலிருந்து அவர் விலகினார். பின்னர் காமராஜருடைய தொண்டராக மாறினார்.



 
மளிகைக் கடைப் பையன், மருத்துவரின் உதவியாள், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரையில் சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது,.... ஃபுரூஃப் ரீடர், பத்திரிகை உதவி ஆசிரியர்... என்று அவரது வாழ்க்கையின் பல வேறுபட்ட அனுபவக் குவியல்கள் எழுத்துக்களாக முகிழ்த்தது. அது சிறுகதை, நாவல், நாடகம், உரைநடை, கட்டுரை, பத்தி எழுத்து, சினிமா என வளர்ந்தது. புதுமைப்பித்தனின் வீச்சும், பாரதியின் புரட்சியும் ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிந்தது. அவரது படைப்புகளுக்கு புகழும் அங்கிகாரமும் கிடைத்தது. இலக்கிய இதழ்களில் மட்டுமல்லாது வெகுஜன இதழ்களிலும் அவரது எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டன. அதனால் அவை தமது தகுதியை உயர்த்திக் கொண்டன.



இருபதாம் நூற்றாண்டின் தலைச் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயகாந்தன் போற்றப்பட்டார். அதன் பின் திரைப்பட வசனகர்த்தா, இயக்குநர் என்று அவரது வாழ்க்கை முற்றிலும் புதிய தளத்தில் அமைந்தது. “பாதை தெரிகிறது பார்” - இப்படத்தின் பாடலாசிரியராக சினிமா உலகினுள் காலடி எடுத்து வைத்தார். புதுமைப்பித்தனுக்கு பின்பு நவீன தமிழ் இலக்கிய போக்கில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய ஜெயகாந்தன், தமிழ் சினிமா உலகிலும் திருப்பத்தை ஏற்படுத்தினார். அவரது நாவலான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" போன்றவை திரைப்பபடமாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் உன்னைப் போல் ஒருவன் நாவலுக்கு திரைப்பட வடிவம் கொடுத்து 3 வாரங்களில் படத்தை இயக்கி வெளியிட்டது மிகப் பெரிய சாதனையாக அக்காலத்தில் கருதப்பட்டது. அதற்கு தேசிய விருதும் கிடைத்தது.




தமிழ்ப் படங்களையே பார்த்தறியாத “கர்மவீரர் காமராஜா;” மீது அளவு கடந்த பற்றும் மரியாதையும் கொண்டிருந்தார் ஜெயகாந்தன். ஜெயகாந்தனின் அழைப்பைத் தட்டிக்கழிக்காத காமராஜரும் இப்படத்தைப் பார்த்து விட்டு பெரிதும் பாராட்டினார். காமராஜருடன் இருந்து இப் படத்தைப் பார்த்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் (ஏ.வி.எம்) ஜெயகாந்தனிடம், “இப்படத்தை தேசியவிருதுக்கு வேண்டுமென்றால் அனுப்புங்கள், கதையை எனக்குத் தாருங்கள். வர்த்தக ரீதியில் லாபம் கிட்டக் கூடியவிதமாக இதனை நான் எடுக்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார். ஆனால் ஜெயகாந்தன் அதற்கு மறுத்துவிட்டார்.



 
சாதாரண மனிதர்களின் உலகம் முதல் அறிவுஜீவித்தன வாழ்வின் அழுத்தங்கள் வரை, சமுதாய முரண்பாடுகள், சிக்கல்கள் போராட்டங்கள், நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம், விழிப்புற்ற பெண்கள், தனிமனித பலம், பலவீனம், ஆன்மீக விசாரணைகள் என ஜெயகாந்தனின் கதைகள் பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டதாக அமைந்தன. அதனாலேயே அவை வெளிவந்த காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஜெயகாந்தனின் படைப்புலகம் வாழ்க்கை மீதான நேசிப்பையும் மனித நேயத்தையும் உளமாரப் பேசுபவையாக உள்ளன.



 
எந்தவொரு எழுத்தாளர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு உண்டு. ஜெயகாந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் பெரிதும் சிறப்புடையன. அவரது முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது 'முன்னுரை இலக்கியம்' எனும் ஓர் தனித்த இலக்கிய வகைமையை நம்மால் அடையாளம் காண முடியும்.



 
பிரபல 'ஆனந்த விகடன்' வார இதழ் ஜெயகாந்தனின் சிறுகதைகளைக் கேட்டு வாங்கி முத்திரைக் கதைகளாக வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. தொடர்ந்து பல புகழ்பெற்ற சிறுகதைகளை விகடனில் எழுதினார் ஜெயகாந்தன். அவற்றுள் ஒன்று தான் 'அக்கினிப் பிரவேசம்' என்னும் சிறுகதை. இது ஆனந்தவிகடனில் வெளியாகி சர்ச்சைகளையும், விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் பெற்றது.



 
ஜெயகாந்தனுடைய படைப்புக்கள் ருஷ்ய, பிரெஞ்சு, செக் ஆங்கில, ஜெர்மனி, உக்ரேனிய மொழிகளிலும், இந்தியாவில் உள்ள பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரர். விருதுகளால் தனது படைப்பிற்கும் தனது படைப்புகளால் விருதுக்கும் பெருமை ஏற்படுத்தியவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை. சாகித்திய அகாதமி விருது, சோவியத் நாட்டின் நேரு விருது, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, கலைஞர் விருது, ஞானபீட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்ப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.



 
”எழுத்து எனது ஜீவன் - ஜீவனம் அல்ல” என்று மார் தட்டிச் சொன்ன ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே!. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றால் அஃது மிகையில்லை.

Friday, August 28, 2009

மியூசிக் தெரபி - இசைச் சிகிச்சை

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன். இசை கேட்டு, உலக உயிர்கள் மட்டுமல்ல, இறைவனே மயங்கியதாகக் கூறப்படுவது அதன் பெருமையை விளக்குவதாகும். வெறும் பக்தி வெளிப்பாட்டிற்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே இசை என்பதில்லை. அதன் மூலம் நோய்களையும் குணப்படுத்த முடியும் என்பதே அதன் சிறப்பான முக்கியத்துவம்.


தற்போது மாற்றுச் சிகிச்சை முறை என்பது எல்லா இடங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. உண்மையில் மாற்றுச் சிகிச்சை முறை என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? பயன்கள் என்ன? என்பது பற்றி பலர் முறையாக அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


தற்போதுள்ள ஆங்கில மருத்துவமுறைக்கு மாற்றாக உள்ள இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், யோகா தெரபி போன்றவையே மாற்று மருத்துவச் சிகிச்சை முறை என அழைக்கப்படுகின்றது. இதில் ‘மியூசிக் தெரபி' எனப்படும் இசை வழியான சிகிச்சை முறையும் ஒன்றாகும். இவற்றின் முக்கிய பயன்கள் என்னவென்றால் பின்விளைவுகள் ஏதும்  ஏற்படாது என்பது தான்.


 
இசைவழி சிகிச்சைமுறை
பல்வேறு விதமான நோயுற்ற மனிதர்களுக்கு, அவர்கள் தம் நோயின் தன்மைக்கேற்றவாறு குறிப்பிட்டவகை இசைக் கோர்வைகளைப் பயன் படுத்தி நோயினைத் தீர்க்க முனைவதே மியூசிக் தெரபி எனப்படும் இசைவழிச் சிகிச்சை முறையாகும்.


குறிப்பிட்ட வகை இசையின் மூலம், பிறழ்வான நடத்தையுடையோர், மாறுபட்ட குணாதிசியங்களை உடைய மனிதர்கள், சிலவகை மன நோயால் பாதிக்கப்பட்டோர், உடல்நலக் குறைபாடு உடையவர்கள் எனப் பலருக்கும் குறிப்பிடத் தகுந்த விதத்தில் முன்னேறம் அடைவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


புகழ்பெற்ற பலமருத்துவமனைகளிலும் மாற்றுச் சிகிச்சை முறையாக இசை பயன்படுத்தப்படுகின்றது. சான்றாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இசைவழி சிகிச்சைக்கு எனத் தனியாக ஒரு பிரிவு செயல்படுவதைக் கூறலாம்.


பல்வேறு ராகங்கள் பல்வேறு நோய்களின் கடுமையைக் குறைப்பதுடன், அவை குணமாவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்படுள்ளது. மேலும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக, மாணவர்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தி நன்கு படிக்க, பல்வேறு பிரச்னையான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் (STRESS) குறைய, கோபம் போன்ற குணங்கள் மறைய என இசை பல விதங்களில் துணைபுரிகின்றது.


நடைமுறை வாழ்வில் இசை மூலம் அமைதி பெறுதல்.
பல்வேறு பிரச்னைகளும் போராட்டங்களும் கொண்ட நெருக்கடியான கால கட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அவனுக்கு தன்னுடைய மன அழுத்ததைக் குறைக்க கோவில் போன்றவற்றிற்குச் சென்று ஆன்மீக மார்க்கத்தில் ஈடுபடவோ, வீட்டிலே அமர்ந்து தியானம் செய்யவோ முடிவதில்லை.


மனம் அடங்கினால் தானே தியானம் செய்ய முடியும்? மனதை அடக்க என்ன செய்வது?. அதற்குத் தான் இசை பயன்படுகின்றது.

இசை மூலம் ஒருவன் மன அழுத்ததைக் குறைப்பதுடன், அமைதியையும், மன நிம்மதியையும் பெறலாம். அதற்கான இசைக்கோர்வைகள் அடங்கியவை ஒலிநாடாக்களாகவும் (ஆடியோ கேசட்) குறுந்தகடுகளாகவும் (சி.டி) கடைகளில் கிடைக்கின்றன.


இல்லத்திலேயே தனியான, வெளிநபர் தொந்தரவில்லாத ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்கும் நபர், தன்னுடைய டேப்ரெக்காடரிலோ, மியூசிக் சிஸ்டத்திலோ இசையை ஒலிக்கச் செய்ய வேண்டும். பின்னர் தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்து கொண்டு உடலைத் தளர்ச்சியாக வைத்துக் கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி இசையினைக் கேட்க முற்படவேண்டும்.


தன்னுடைய அனைத்துப் பிரச்னைகளையும் மறந்து, தன்னையும் இசையையும் தவிர வேறு எந்த நினைப்பும் இல்லாதவாறு மனதை ஒருமுகப்படுத்தி இசையில் ஆழும் பொழுது மனம் அளவற்ற நிம்மதி அடைவதுடன், புதியதொரு உற்சாகமும் அடைகின்றது. இது சிறப்புடன் செயலாற்ற ஊக்கப்படுத்துவதுடன், தன்னம்பிக்கையோடு எதையும் எதிர் கொள்ளவும் தூண்டுகின்றது.



எனவே வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி மன நிம்மதியற்றுத் தவிப்போர் வீட்டிலிருந்தவாறே இச்சிகிச்சை முறையைப் பின்பற்றலாம். இது அதிக செலவில்லாததும், பக்கவிளைவுகள் எதுவும் இல்லாததுமான முறை.


மியூசிக் தெரபி குறித்த பல ஒலிநாடாக்கள், குறுந்தகடுகள் சென்னை கிரி டிரேடிங் ஏஜென்சியிலும், (MUSIC THERAPY- Dr.P.Bharathy) லாண்ட்மார்க்கிலும் கிடைக்கின்றன. அப்பல்லோ மருத்துவமனையும் (‘Music for Pregnancy and babies', ‘Music for Sleep and Relaxation') என்ற ஒலிநாடாக்களையும் அது போன்று பல குறுந்தகடுகளையும் வெளியிட்டுள்ளது. மற்றும் TIMES MUSIC வெளியிட்டுள்ள Shravanam போன்ற பல ஒலிநாடாக்களும், இளையராஜாவின் ‘How to name it?, Nothing but wind போன்ற ஒலிநாடாக்களும், திருமதி ரேவதி கிருஷ்ணா, வீணை எஸ். காயத்ரியின் வீணை இசைக் குறிப்புகளும் மனதை அமைதிப்படுத்த வல்லவையே!

மன நலம் காப்போம்! குண நலம் பெறுவோம்!

Wednesday, August 26, 2009

பிரியவாதினி - நிறைவுப்பகுதி

மறுநாள் காலை, மதங்க தேவர் விடுதியில் அனுஷ்டானங்களை முடித்து விட்டு தியானத்தில் இருந்த போது அரசாங்க அதிகாரி ஒருவர் வந்து அடிபணிந்து பல்லவச் சக்கரவர்த்தி ‘ காலை பத்து நாழிகைக்கு மேல் அங்கு வந்து ஆச்சார்யரை வணங்க விரும்புவதாக' தெரிவித்துக் கொண்டார்.

'அப்போது பிரியவாதினியைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் உதவியை நாடலாமா?' என்று கூட முனிவருக்குத் தோன்றிற்று.


‘ஒருக்கால் இவள் ஸ்ரீபுரம் தனியாகப் போயிருப்பாளா?' அவருக்கும் பலவித மனக்கவலைகள் அலைமோதிக் கொண்டிருந்தன.


பத்துநாழிகைக்கு மேல் சக்கரவர்த்தி பரிவாரங்களுடன் விடுதிக்கு வருகை தந்தார்.


சக்கரவர்த்தியை மதங்க முனிவர் எதிர்கொண்டு வரவேற்று ‘ வர வேண்டும்.., வர வேண்டும்.. இந்த ஏழை தன்யனானேன்' என்று அழைத்து ஆசனத்தில் அமரச் செய்தார்.


பரிவாரங்களில் ஒருசிலர் பெரிய தந்தப்பேழைகளைக் கொண்டு வந்து முனிவரின் முன்னால் வைத்தார்கள்.


பிறகு சக்கரவர்த்தி ஒரு ‘சமிக்ஞை' மூலம் எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு, ஆசனத்தை விட்டு எழுந்து ‘தாங்கள் கருணை கூர்ந்து என் அழைப்பினை ஏற்று இங்கு வந்து இந்த விழாவை நடத்திக் கொடுத்தற்கு பல்லவ நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். தங்கள் குருகுலம் அமைந்த நந்திமலையில் ஒரு குடைவரைக் கோயில் அமைப்பதற்காக நூறு சிற்பிகளை இங்கிருந்து அனுப்பியிருக்கிறேன்! அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் தங்கள் குருகுலத்திற்கும் வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து தர ஏற்பாடு செய்திருக்கிறேன்..' என்று கூறிய சக்கரவர்த்தி, சட்டென்று பேச்சை நிறுத்தி, ‘ஆச்சார்ய தேவா!!.. தாங்கள் ஏதோ மனதில் தீவிரமாக விசனப்பட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறதே!..' என்று வினவினார்.


மதங்கர் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டு, ‘ சக்கரவர்த்தி... என்னுடைய பிரதம சிஷ்யையான ஒரு இளம் பெண்ணை நேற்று பிற்பகல் முதல் காணவில்லை. அவளைத் தேட தாங்கள் ஏற்பாடு செய்ய இயலுமா, இது என் வேண்டுகோள்!..' என்றார் மதங்கர்.


சக்கரவர்த்தி ஆசனத்தில் அமர்ந்து சில கணங்கள் மௌனமாக இருந்தார்.


அப்போது மதங்கர் மீண்டும் சொன்னார். ‘.. சில காலத்திற்கு முன் பல்லவ நாட்டைச் சேர்ந்த குணசேனன் என்னும் இளைஞன் என்னிடம் நடனமும், இசையும் சில காலம் பயின்றான். அவன் இங்கே அருகில் உள்ள ஸ்ரீபுரம் என்னும் ஊரைச் சேர்ந்தவன். அவன் நடனத்திலும் இசையிலும் மிகவும் சமர்த்தனாக இருந்தான். அவன் என்னுடைய பிரதம சிஷ்யன் என்று சொல்வதற்கே பெருமைப்படுவேன். இந்தப் பெண் எனக்கு பிரதம சிஷ்யையாக இருந்தவள். இந்த இளம் பெண் அந்த வாலிபனை மனதால் மிகவும் விரும்பினாள்.. அந்த வாலிபன் ஒரு வருடத்திற்கு முன்னால் தன் தாய் தந்தையரை பார்த்து விட்டு வருவதாகச் சொல்லிப் போனவன் திரும்பி வரவேயில்லை. நானும் இந்தப் பெண்ணிற்காக சீடர்களை அனுப்பி ஸ்ரீ புரத்தில் குணசேனனைத் தேடிப் பார்க்க எவ்வளவோ முயற்சிகள் செய்தேன். பலனில்லாமல் போய்விட்டது!..'


சக்கரவர்த்தி ஒருகணம் மௌனமாக இருந்து விட்டு, ‘நேற்று சன்மானம் வாங்கிக் கொள்ளாமல் போன பெண் அவள் தானா?..' என்று வினவினார்.


‘ஆமாம், பிரபு!'


‘.. ஆச்சார்ய தேவா! அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்கள் எல்லாம் கிடைத்து விட்டன. அவளைத் தாங்கள் இனித் தேடிப் பயனில்லை!..'


‘பிரபோ!.. அது என்ன?'


‘.. ஆமாம்.. அந்தப் பெண் நேற்றுப் பிற்பகல் இங்கிருந்து சற்றுத் தொலைவில் உள்ள புத்த விஹாரத்திற்குச் சென்று புத்த பிக்ஷுணி ஆகி விட்டாள்'


‘ஆஹா!.. அப்படியா? அவள் குணசேனனைக் காணாமல் மனமுடைந்து போய் விட்டாள் என்றே நினைக்கிறேன். எவ்வளவோ இடங்களில் நானும் குணசேனனை தேடிப் பார்த்தேன்!..'


சக்கரவர்த்தி ஒரு கணம் ஆசனத்திலிருந்து எழுந்து தன் சிரசிலிருந்து மணி மகுடம் எடுத்து மதங்க தேவரின் திருவடியில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்.


‘ஆச்சார்ய தேவா!.. இந்த குணசேனனை எங்கெல்லாம் தேடினீர்கள்?.. என்னை மன்னித்து அருள வேண்டும். நான் அந்தப் பெண்ணிற்கு எவ்விதத் தீங்கும் செய்துவிடவில்லை...'


மதங்கர், சக்கரவர்த்தியை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு அதிர்ந்தவராக ‘குணசேனா!.. சக்கரவர்த்தியா!?.. தாங்களா?!..' என்று பதறினார்.


‘இந்த ஏழைதான் தங்கள் சிஷ்யன் குணசேனன். இதோ இந்த தந்தப்பேழையில் ஓலைச்சுவடியில் நானே எழுதி வைத்த தங்கள் அமர இலக்கியம் ‘பிருஹத்தேசி' இருக்கிறது. இதுவே இந்த எளியவனுடைய காணிக்கை. அந்தப் பெண் இயற்றிய தமிழ்ச் செய்யுளை நந்தி மலை குடைவரைக் கோயிலில் கல்வெட்டுக்களாகப் பதிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்தப் பேழையில் நானே உருவாக்கிய ஒரு புதியதோர் யாழ் இருக்கிறது! இந்த யாழ், அவளுடைய யோசனையின் பேரில் தாங்கள் விவரித்த சுத்த, சாயலக, சங்கீர்ண ராகங்களை நன்றாக மீட்டக் கூடியது.'


‘சக்கரவர்த்தி! எப்படிப்பட்ட அறிவாற்றல் மிக்க அந்தக் கலையரசி என் கைவிட்டு போய் விட்டாள் என்று நினைக்கும் போது...'


'புத்த, ஜைன மதங்கள் வாழ்க்கையைத் துறப்பதால் மோட்சத்தை அடைய முடியும் என்று மோட்சத்திற்கு தான் வழிகாட்டுகின்றன. வாழும் தர்மங்களை விவரித்து, சிறப்பாக வாழ்ந்து மோட்சத்தை அடைய அவை வழி சொல்லவில்லை!.. ஒரு மாபெரும் கலையரசியை இந்த மதம் விழுங்கி விட்டது... அந்த மதங்களை வேரோடு களைவதிலேயே நான் என் வாழ்நாள் முழுவதையும் செலவிடுவேன்..'


மதங்கர் அதிர்ந்து போய் நின்றார்!


‘இந்த யாழின் பெயர்..' என்று சற்று நிறுத்தினார் சக்கரவர்த்தி.


‘பெயர்?..'


‘இதன் பெயர்.. பிரியவாதினி!'.. என்று சொன்ன சக்கரவர்த்தியின் கண்கள் நீர்ச்சுனைகளாய் நிரம்பி இருந்தன.


ஆசிரியர் குறிப்பு:

நந்திமலை என்று கதையில் குறிப்பிட்டது பிற்காலத்தில் குடுமியான்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கே மகேந்திரபல்லவன் ஆணையின் பெயரில் ஒரு குடைவரைக் கோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் கோவிலில் இசைக் கல்தூண்கள் ஏழு சுரங்களை வாசிக்கக் கூடிய அளவில் உள்ளன. இது உலகப் பிரசித்தி பெற்றது.


இந்த மலைச்சாரலின் தென்பகுதியில் உள்ள ஒரு பாறைக் கல்வெட்டில், முப்பத்தெட்டு வரிகளில் ஒரு செய்யுள் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வரியில் 64 எழுத்துகள் இருக்கின்றன. 64 எழுத்துகளிலும் இசை, இலக்கணக் குறியீடுகள் காணப்படுகின்றன.


இந்தக் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரே பாறை மேல் ஒரு ஆசானும், அருகே ஒரு கமண்டலமும் சிற்பங்களாக உள்ளன.


நமது நாட்டு இசை மரபில் நடனத்தோடு இணைந்தது இசையாகும். இசை தனியாகப் பாடப்பட்டதில்லை.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மதங்கர் எழுதிய 'பிரஹத்தேசி' என்னும் வடமொழி நூல் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்திற்குப் பிறகு ஒரு முக்கியமான இசை, இலக்கண நூலாகக் கருதப்படுகிறது. இந்நூல் இப்பொழுது முழுமையாகக் கிடைக்கவில்லை.


மகேந்திரவர்மன், ருத்ராச்சாரியாரிடம் இசை பயின்றவன். அவனுக்கு குணசேனன் என்ற பெயரும் உண்டு. இவன் உருவாக்கிய புதிய யாழின் பெயர் 'பரிவாதினி' என்று சொல்லப்படுகிறது.


'பரிவாதினி' என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் சரியாக வரவில்லை. அது பிரியவாதினியாகவே இருக்கக் கூடும்.


வடமொழியில் வல்லவனான மகேந்திரவர்மன் முதலில் ஜைன மதத்தில் இருந்து பிறகு சைவ மதத்தைத் தழுவியதாக வரலாறு. இவன் எழுதிய வடமொழி நாடகம் ‘மத்தவிலாசம்' புத்த, ஜைன மதங்களின் குறைபாடுகளை கேலி செய்வதாக காணப்படுகிறது.


(முற்றும்)


நன்றி : இந்தக் கதையை இணையத்தில் பதிப்பிக்க அனுமதி தந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

Monday, August 24, 2009

எழுத்தாளர் பூரம் சத்யமூர்த்திக்கு ஆர்.வி. விருது

(செய்தி - நன்றி தினமணி )


எழுத்தாளர்கள் பூரம், ரேவதிக்கு ஆர்.வி. விருது


சென்னை, ஆக. 23: ஆர்.வி. அறக்கட்டளை சார்பில், "பூரம்' எஸ்.சத்தியமூர்த்தி, "ரேவதி' டாக்டர் ஈ.எஸ்.ஹரிஹரன் ஆகியோர் இந்த ஆண்டுக்கான சிறந்த எழுத்தாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆர்.வி. விருது வழங்கப்படுகிறது.


இந்த விருதுடன் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான பொற்கிழியும் பரிசாக வழங்கப்பட உள்ளது.


சிறந்த நாவலாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான ஆர்.வி.யின் முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 29-ல் அனுசரிக்கப்படுகிறது.


அன்றைய தினம் சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள சங்கராலயம் அரங்கில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மானந்தா விருதுகளை வழங்குகிறார்.


மேலும் "சாதனையாளர் ஆர்.வி' என்ற நூலின் முதல் பிரதியையும் அவர் வெளியிடுகிறார். அதை எழுத்தாளர் பெ.சு.மணி பெறுகிறார்.


நிவேதிதா பதிப்பகம் தயாரித்து வழங்கும் "ஆர்.வி. சிறுகதைகள்' தொகுதி 1, தொகுதி 2 என்ற இரண்டு நூல்களின் முதல் பிரதியை "தினமணி' நாளிதழ் ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிடுகிறார். இதை எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) பெறுகிறார்.

************
வயதான காலத்திலும் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்காக உழைத்து வரும் பெரியவர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
வணக்கங்கள்!

பிரியவாதினி - 3 & 4

3

‘சிசிரருது' தொடங்கும்போது ஒருநாள் பகலில் பாடத்தை முடித்தவுடன் குணசேனன், ஆசார்யரிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.


‘ஸ்வாமி ஒரு விக்ஞாபனம், அடியேன் ஸ்ரீபுரத்தை விட்டுவந்து வெகுகாலமாகி விட்டது. என்னுடைய வயதான தாய், தந்தையர் என்னைக் காண ஆவலுடன் இருப்பார்கள். தங்கள் அனுமதியின் பேரில் நான் ஒரு தடவை என் தாய் தந்தையரை வணங்கி விட்டு ஒரு மாத காலத்தில் திரும்பி வருவதாக யோசனை உதித்திருக்கிறது. தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.'


‘குணசேனா, மங்களம் உண்டாகட்டும். விரைவில் திரும்பிவர வேண்டும்' என்று ஆசிர்வதித்தார் ஆசார்ய தேவர்.


குணசேனன் அன்று மாலையில் குடிலுக்குத் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே சதங்கை ஒலி கேட்டது.


‘பிரியவாதினி, வரவேண்டும்... ஏன் சற்று வாட்டமுற்றிருக்கிறாய்' என்று கேட்டான் குணசேனன்.


‘ஒன்றுமில்லை ஸ்வாமி' என்று சொல்லி பிரியவாதினி சற்று மௌனமாக இருந்தாள்.


‘பிரியவாதினி, நீ எப்போதும் போல மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை'


‘ஸ்வாமி, இந்த ஏழை உங்களிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கலாமா?'


‘நிச்சயமாக, நான் செய்யக் கூடிய உதவி என்ன இருக்கிறது?'


‘ஸ்வாமி, தாங்கள் இப்பொழுது ஸ்ரீபுரத்திற்கு அவசியம் செல்ல வேண்டுமா?' -பிரியவாதினியின் அழகிய விழிகளில் ஆழங்காண முடியாத தாபமும், கவலையும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!


‘ஆமாம். என்னுடைய வயதான தாய், தந்தையர் இவ்வளவு மாதங்களாக என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களைக் கண்டு, ஆசி பெற்று, உடனே திரும்பி விடுவேன்.'


பிரியவாதினி சில கணங்கள் மௌனமாக நின்றாள்.


‘ஸ்வாமி! இந்த ஏழையையும் தாங்கள் அழைத்துச் செல்ல முடியாதா?...' என்று கேட்ட பிரியவாதினி விம்மல்களோடு அவன் காலடியில் விழுந்து வணங்கினாள்.


குணசேனன் பதறிப்போனான்!


‘ஸுகுமாரி!.. நீ வீணாகக் கலங்க வேண்டாம். நான் விரைவில் திரும்பி வருகிறேன்!


அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை படர்ந்தது.


‘ஸ்வாமி! தாங்கள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது!...' என்று விம்மினாள் பிரியவாதினி.


‘ நானும் உன்னை விட்டு பிரிய விரும்பவே இல்லை. இப்போது நீ எனக்கு விடை கொடு, விரைவில் நான் திரும்பி வருகிறேன்' என்றான் குணசேனன்.



4



‘ சிசிரருது' முடிந்து ‘வசந்தருது' தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் மாலைவேலையில் பிரியவாதினி ராஜபாட்டையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்! இரண்டு மாதங்கள் ஆகியும் குணசேனனைக் காணவில்லை! குணசேனனின் நண்பன் வித்யாதரனும் அனுமதி பெற்று ஸ்ரீபுரம் போயிருந்தான்! இவர்களைப் பற்றிய விவரம் யாரிடம் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை!


இப்படிப்பல மாதங்களாகியும் குணசேனன் திரும்பி வரவில்லை. இந்த வருடம் வசந்த ருதுவின் தொடக்கத்தில் பல்லவச் சக்கரவர்த்தியிடமிருந்து மதங்க முனிவருக்கு ஓர் அழைப்போலை வந்தது. காஞ்சித் தலைநகரில் நடனக் கலை விழா ஏற்பாடாகியிருப்பதாகவும், மதங்க முனிவர் தன் நடன கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சக்ரவர்த்தி அழைப்பு விடுத்திருந்தார். வைகாசி மாதத் தொடக்கத்தில் சக்கரவர்த்தி தேர்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.


செய்தி கேட்டு பிரியவாதினி சற்றே தெளிவடைந்தாள்.


‘காஞ்சித்தலைநகருக்குப் போனால் அதற்கருகே உள்ள ஸ்ரீபுரத்தில் குணசேனனை சந்திக்க இயலுமல்லவா?, அப்படியே குணசேனனும் அந்த நடன நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா?'


வைகாசி மாதத்தில் தேர்கள் வந்து விட்டன. காஞ்சிக்குக் கிளம்பும் முன் பிரியவாதினி ஆச்சார்யரை அடிபணிந்து ‘ஸ்வாமி! என்னுடைய அந்தரங்கத்தை தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!... அந்த குணசேனன் இன்னும் திரும்பி வரவில்லை. அவரில்லாமல் என்னால் வாழ முடியாது என்றே தோன்றுகிறது!.. இப்போது நாம் செல்லும் போது ஸ்ரீபுரத்தில் அவரைப் பற்றி விசாரித்து வர தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விம்மினாள்'


‘பிரியவாதினி!.. நானே அதை மனதில் நினைத்திருக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!..' என்றார் மதங்க முனிவர்.


காஞ்சி அரண்மனையில் நடனக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் மதங்க முனிவருக்கும், அவருடைய சிஷ்யர்களுக்கும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார். அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் நன்றாக உபசரித்து, பணிவிடை செய்யக் காத்திருந்தார்கள்.


பிரியவாதினியின் மனம், எப்பொழுதும் ஸ்ரீபுரத்தில் உள்ள குணசேனனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.


கலை நிகழ்ச்சிகள் தொடங்கிய முதல் நாள் பிரியவாதினி நடனமாடிய போது அவளுடைய கண்கள் மக்கள் கூட்டம் நிரம்பிய அந்த மண்டபத்திலும், மற்ற காஞ்சிநகர் கலைஞர்கள் மத்தியிலும் குணசேனனையே தேடி அலைந்தன. பத்து நாட்கள் நடந்த வசந்த விழாவிலே பத்துநாட்களும் சக்கரவர்த்தியும் பட்டமகிஷியும் சபையில் வந்தமர்ந்து நடனங்களை ரசித்தார்கள். பிரியவாதினிக்கு ஏக்கம் தான் மிஞ்சிற்று!


மதங்கர் இரண்டு சீடர்களை ஸ்ரீபுரத்திற்கு அனுப்பி குணசேனனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.


இந்த விழாக்களின் கடைசிநாளில் மதங்க முனிவருக்கு பல்லவச் சக்கரவர்த்தி சன்மானங்கள் கொடுத்து விசேஷமாய் கௌரவித்ததோடு அவருடைய சிஷ்யர்கள் யாவருக்கும் தனித்தனியாக பரிசுப் பட்டாடைகளையும், பொற்கிழிகளையும் வழங்கினார். ஆனால் அப்போது பிரியவாதினியை மட்டும் காணவில்லை.


மதங்க தேவர் அரண்மனை விடுதிக்குத் திரும்பியதும் மிகவும் கவலையுற்றவராய் பிரியவாதினியைத் தேடி அழைத்து வருவதற்கு சீடர்களை அனுப்பினார்.


எங்கு தேடியும் பிரியவாதினி அகப்படவில்லை.


(தொடரும்)



Sunday, August 23, 2009

பிரியவாதினி - 2

2


பகுதி -1

'கிரீஷ்மருது' தொடங்கிய சமயம். மதங்க முனிவர் பகல் உணவிற்குப் பிறகு இருபது நாழிகையளவில் வழக்கம் போல தன்னுடைய அறையில் பிரியவாதினிக்கு மட்டும் அவருடைய சங்கீத இலக்கணங்களை விவரிக்கத் தொடங்கினார்.


ஒருகணம் தியானித்தபின், 'பிரியவாதினி அந்த இளைஞன் குணசேனனை இங்கே அழைத்து வா!' என்று பணித்தார்.


'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று சொல்லி துள்ளி எழுந்து பிரியவாதினி வெகு விரைவில் குணசேனனை அழைத்து வந்தாள்.


அவன் வந்து வணங்கி எழுந்ததும் மதங்கர் ஆசிர்வதித்து விட்டு, 'குணசேனா, இன்றுமுதல் பிரியவாதினியோடு சேர்த்து உனக்கும் சங்கீத இலக்கணங்களை விவரிக்க எண்ணுகிறேன். சித்தமாக இருப்பாயா?...'


'காத்திருக்கிறேன் ஸ்வாமி, அடியேன் பாக்கியம்..'


அப்போது பிரியவாதினியின் முகமும் சற்றே மலர்ந்ததை குணசேனன் கவனிக்காமலில்லை.


‘பரத முனிவருடைய இசை இலக்கணம் பல நூற்றாண்டுகளாக அப்படியே காப்பாற்றி வருகிறோமே தவிர அதை ஆராய்ந்து வளர்ச்சியடைவதற்கு யாரும் இதுவரை முயற்சி செய்யவில்லை. அந்தப்பணியை நான் சில வருட காலமாக மேற்கொண்டு சில இலக்கண விரிவாக்கங்களை சூத்திரங்களாக வடமொழிக் கவிதையில் இயற்றினேன். இதைப் பிரியவாதினி மட்டும் சிலகாலமாக என்னிடம் கற்று வருகிறாள். இதை நீயும் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு இந்த இலக்கண அலங்காரங்களைக் கற்றுத்தர ஒப்புக் கொள்வாயல்லவா?...


'தங்கள் ஆக்ஞை ஸ்வாமி..' என்று அடிபணிந்தான் குணசேனன்.


அன்று முதல் ‘ஹேமந்தருது'வின் முடிவு வரை குணசேனனும், பிரியவாதினியும் மட்டும் அந்த இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்து கொண்டார்கள். ஏறத்தாழ ஐந்நூறு ஸ்லோகங்களை இயற்றி முடித்த மதங்கமா முனிவர், இருவரையும் மனதுக்குள்ளே ஆசிர்வதித்தார்.


'ஸ்வாமி! பரதமுனிவர் எழுதிய 18 ‘ஜாதிகளை' 18 ‘ராகங்'கள் என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். தங்களூடைய இலக்கண அலங்காரங்கள் மூலம் அவைகள் பதினெட்டாயிரமாகப் பெருகி வளர முடியும். இதில் துருவகானத்தில் உள்ள அலங்காரங்களை தங்கள் இலக்கணப்படி இந்த அடியவள் ஒரு தமிழ்ச் செய்யுளாக தங்கள் கிருபையால் இயற்ற முடிந்திருக்கிறது. இந்தச் செய்யுளை வித்யார்த்திகளுக்கு கற்றுக் கொடுப்பது சுலபமாக இருக்குமல்லவா?...' என்று கேட்டாள் பிரியவாதினி ஒருநாள்.


‘ஆமாம். இங்கே அநேக தமிழ்ப்புலவர்கள் இசை கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.'


‘அந்தச் செய்யுளகளை தங்கள் முன் பாடிக்காட்டலாமா?'


குணசேனனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.


பிரியவாதினி அந்தச் செய்யுளைப் பாடினாள்.


‘மிகவும் நன்றாக இருக்கிறது. இதை இனி வித்யார்த்திகளுக்கு நீ கற்றுத் தரலாம்!..'


குணசேனன் அடிபணிந்து, ஸ்வாமி! அடியேனும் இதைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.. அடியேனுக்கு தமிழ்ச் செய்யுள் இயற்றும் புலமை இல்லை. ஆனால் வடமொழியில் கவிதை எழுதுவேன். பிரியவாதினியின் தமிழ்ப்புலமையைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைகிறேன்...' என்றான் குணசேனன்.


‘குணசேனா!.. அவள் ஒரு தமிழ்ப்புலவரின் மகள். அதுமட்டுமல்ல; இங்கே குருகுலத்திற்கு வருகின்ற தமிழ்ப்புலவர்களிடமும் தமிழ்ச்செய்யுள் இயற்றுவதற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள்.. வடமொழி, தமிழ் இரண்டிலுமே இவள் புலமை பெற்றவள்!...'


'அந்தச் செய்யுளை இந்த ஏழைக்கும் கற்றுத்தரும்படி ஆசார்யர் பணிக்க வேண்டும் ஸ்வாமி!'


‘அப்படியே ஆகட்டும்' என்றார் மதங்க தேவர்.


குணசேனனும், பிரியவாதினியும் மதங்க தேவரின் இசை, இலக்கண அலங்காரங்களை நன்றாகப் பாடம் செய்த பின், ஒருநாள் பிரியவாதினி கேட்டாள்.


'ஸ்வாமி! இந்த வடமொழி இசை இலக்கண சூத்திரங்களுக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டாமா?...'


‘அதைச் செய்யக் கூடிய வல்லமை பெற்றவன் குணசேனன் தான்! அவனே அதற்கு பெயர் சூட்டட்டும்!'


‘ஸ்வாமி, இது மாபெரும் இலக்கியம். இதை வடமொழியில் ‘ப்ருஹத்தேசி' என்று சொல்லலாம் என்றான் குணசேனன்.


மதங்க முனிவர் மெல்லப் புன்னகை புரிந்தார்!
 
(தொடரும்)

Saturday, August 22, 2009

பிரியவாதினி - பூரம் சத்தியமூர்த்தி

79 வயதாகும்   பூரம் சத்தியமூர்த்தி  அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். கலாரசனை மிக்கவர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வருகிறார். (அவர் சொல்லச் சொல்ல நண்பர்கள் எழுதி வருகின்றனர்). 1960களில் எழுதி அவர் பரிசு பெற்ற சிறுகதைகளுள் ஒன்று இங்கே...
அவரைப் பற்றிய விவரங்கள் இங்கே...
 
- - - - - **********************************************************************************
பிரியவாதினி
பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையில் நந்திமலைச் சாரலில் வசந்த காலத்தில் ஒருநாள் காலை நேரம்! அங்கே பாறையைப் பின்னணியாகக் கொண்டு நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்மேடையில் ஒருபுறம் பதினைந்து இளங்குமரிகள் நடன உடை தரித்து அஞ்சலி முத்திரையுடன் கண்களை மூடித் தியானத்தபடி நாட்டியத்திற்குச் சித்தமாக நின்றார்கள்! இன்னொருபுறம் பதினைந்து இளங்குமாரர்கள் அதே போல் சித்தமாக நின்றார்கள்! அவர்களுக்கெதிரே ஆசனம் போன்று அமைந்து ஒரு பாறை மேல் மதங்க முனிவர் தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறத்தில் தரையில் நான்கு இளம்பெண்கள் இசைக்கருவிகளுக்கு ஸ்ருதி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு வலது புறத்திலே சில பார்வையாளர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிலே இரண்டு இளைஞர்கள் புதுமுகங்களாகத் தென்பட்டார்கள்!

யாழின் மெல்லிய இசை ஸ்ருதியை இழைத்தது.

மதங்கதேவர் ஒரு ஜதிஸ்வரத்தைப் பாடத் தொடங்கினார்.

‘ஸா, தாபாம கா ப ரிக பாம கரீ
கரீ ஸாரிஸா தத ஸா ரீ கா பா பதரீஸா
ஸா ரி கா பபத ரி....'

அந்த வித்யார்த்திகள் மிகவும் சுறுசுறுப்பாக தாளக்கட்டு விடாமல் நடனம் செய்தார்கள்!

பெண்கள் பகுதியில் முன்னால் நின்றிருந்த ஓர் அழகிய இளங்குமரி மிகச்சிறப்பாக ஆடி அடவுகளைத் தெளிவாக அபிநயித்தாள்! சிலர் தவறு செய்யும் பொழுது மதங்கர் இடைமறித்து, அந்தப் பெண்ணை மறுபடி ஆடச் செய்து மற்ற வித்யார்த்திகளும் அதைக் காணும்படிச் செய்தார். இதற்குப் பிறகு சில சித்தர் பாடல்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக அபிநயித்துக் காட்டினார்கள்.

இப்படி அந்த நடனப்பயிற்சி ஏறத்தாழ ஆறு நாழிகைகள் நடைப்பெற்றன. பின்னர் அது முடிந்ததற்கு ஆசார்யர் ‘சமிக்ஞை' செய்யவே வித்யார்திகள் ஒவ்வொருவரும் வந்து தனித்தனியாக அவரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பெண்களின் முதன்மையாக நின்ற அந்த இளம்பெண் மிகவும் அடக்கத்துடன் ஆசார்யர் முன் வந்து வணங்கி எழுந்து விநயமாகத் தெரிவித்தாள்!

‘ஆசார்யதேவரே! தங்களை நமஸ்கரிக்க இரண்டு புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்!'

மதங்கர் கண்களைத் திறந்து பார்த்தார்.

அந்த இரண்டு இளைஞர்களும் முன்னால் வந்து சில பழங்களை அவர் முன் ஒரு தட்டில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ‘அபிவாதநம்' சொன்னார்கள்.

‘ஆசார்யதேவா! நாங்கள் இருவரும் பல்லவ நாட்டைச் சேர்ந்தவர்கள்!.. காஞ்சிக்கு அருகே உள்ள ஸ்ரீபுரத்திலிருந்து வருகிறோம்!... என் பெயர் ‘குணசேனன்'. இவன் என் நண்பன் ‘வித்யாதரன்'! நாங்கள் இருவரும் காஞ்சியில் சிலகாலம் நடனமும், இசையும் பயின்றவர்கள்... இந்தக் கலையை விருத்தி செய்து கொள்வதற்காக தங்கள் திருவடியை தஞ்சம் அடைந்திருக்கிறோம்... எங்களுக்கு அநுக்ரஹிக்க வேணும்!...'

‘நீங்கள் இருவரும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்?..'

‘ஸ்வாமி... நாங்கள் இருவரும் க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.. அடியேன் கொஞ்சம் ‘சாமகானம்' ‘அத்யயனம்' செய்திருக்கிறேன்.

‘மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் எந்த ஆசாரியரிடம் நடனமும் இசையும் பயின்றீர்கள்...'

‘குலபதி ஆசார்யர் ருத்ராசாரியாரிடம் பயின்றிருக்கிறோம்..'

‘ஆஹா... அவரிடம் தான் அடியேன் சிறுவயதிலே பாடம் பயின்றேன். அவருடைய ஆக்ஞையின் பேரில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்திமலைச் சாரலில் குருகுலத்தை அமைத்துக் கொண்டேன். அவர்தான் எப்பேர்பட்ட மகாபுருஷர்... அவர் சுகமாக இருக்கிறாரா?...

‘ஸ்வாமி, அவர் ‘காலகதி' அடைந்து இரண்டாண்டுகள் ஆகி விட்டன. அவர் தான் கடைசித் தறுவாயில் தங்கள் பெயரைச் சொல்லி, தங்களிடம் எங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுமாறு பணித்தார்.'

'அப்படியா, நீங்கள் இருவரும் குருகுலத்திலே தங்கிப் பாடம் கேட்கலாம்'

இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

‘தீர்காயுஸ்மான் பவா!.. பிரியவாதினி இந்த பிரம்மச்சாரிகளை நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாயாக!..”

'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று அந்த இளநங்கை நமஸ்கரித்து எழுந்தாள்.

பிரியவாதினி அந்த இரண்டு இளைஞர்களையும் மிகவும் பணிவுடன் அழைத்துச் சென்றாள். அந்த இடத்திலிருந்து அரை நாழிகை தொலைவில் மதங்கருடைய ஆஸ்ரமம் தென்பட்டது. அதை ஒட்டி பல குடில்கள் இருந்தன. ஒருபுறம் இளங்குமரர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இளம்பெண்களோடு சற்று வயது முதிர்ந்த தாதிமார்களும் பலவித அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அகன்று பரந்த ஆஸ்ரமத்திலே அமைந்த நடுமுற்றத்தில் ‘ கார்ஹ பத்ய', ‘ஆன்வாஹார்யபசன', ‘ஆஹவனீய' ஆகிய மூன்று அக்னிகுண்டங்கள் லேசாகப் புகையை எழுப்பிக் கொண்டிருந்தன. வேதம் பயிலும் வித்யார்த்திகள் சிலர் அந்த அக்னியிலே ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பின்புறத்தில் பசுக்கள் கட்டப்பட்ட கொட்டில்களில் சில பிரம்மச்சாரிகள் பசுக்களை பராமரித்தார்கள். பெண்கள் பகுதியில் ஒரு பகுதியினர் பகல் உணவிற்காக பழங்களையும், காய்கறிகளையும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தாதிமார்கள் பெண்களுக்கு அலங்காரம் செய்வதிலும், நகைகளை எடுத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

குணசேனையும், வித்யாதரனையும் பிரியவாதினி மிகவும் பணிவுடன் ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘ஸ்வாமி.. நீங்கள் இருவரும் இந்தக் குடிலில் தங்கிக் கொள்ளலாம்.. அங்கே ஒரு மண் பானையில் சுத்தமான நீர் இருக்கிறது. உங்கள் இருவருக்கும் எது தேவையானாலும் என்னிடம் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த அடியவள் அதை நிறைவேற்றக் காத்திருப்பாள்.'

குணசேனன் அவளுடைய பணிவையும் ‘அதிதி சத்கார'த்தையும் கண்டு மிகவும் வியந்து போனான். ‘பிரியவாதினி மிகவும் நன்றி'...

அப்போதுதான் குணசேனன் அவளுடைய அழகிய முகத்தை நேருக்கு நேர் கண்டான். ‘ஆஹா, இவள் தான் எவ்வளவு அழகிய பொற்கொடியாக இருக்கிறாள்! இவளுடைய அங்க அசைவும், சொல்லழகும் தான் எவ்வளவு நளினமாக இருக்கின்றன!'

‘.... தங்களுக்குத் தேவையான நடன ஆடைகளும் சதங்கைகளும் நான் கொண்டு வந்து தருகிறேன்.. சரியாக பதினைந்து நாழிகைக்கு ஆராதனை முடிந்து ஆரத்தி ஆனபின் ஆசார்ய தேவரோடு எல்லோருக்கும் பிக்க்ஷை அளிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே சித்தமாக வந்து விடலாம்!...'

'பெண்ணே! உன் உபசாரங்களையும் தெளிவான பேச்சையும் கண்டு மிகவும் வியக்கிறேன்... இந்த ஆஸ்ரமமே காளிதாசன் வர்ணித்த கன்வ மகரிஷி ஆஸ்ரமம் போல் காட்சியளிக்கிறது... அங்கே வாழும் சகுந்தலையாக நீ தோன்றுகிறாய்!...'

பிரியவாதினி மெல்லப் புன்னகை புரிந்தாள். அவள் கன்னங்கள் இரண்டிலும் லேசாக செம்மை படர்ந்தது.

(தொடரும்)

Thursday, August 6, 2009

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - ஒரு பார்வை - பகுதி - 2

இந்த நாவலின் மூலம் கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் மிக முக்கியமானவை. சமூகம், மதம், அரசியல், கல்வி, சினிமா, ஆன்மீகம் என்பது பற்றி இந்த நாவல் முன் வைக்கும் கருத்துகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. அரசியல் குறித்து நம்பியும் கண்ணனும் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்கள் நுட்பம் சார்ந்தவை. காந்தியின் அரசியல், கம்யூனிஸ்ட்களின் அரசியல் வாழ்க்கை, தி.முக.வின் வெற்றி என எல்லாமே சற்று அதிகமாகவே இந்நாவலில் விமர்சனத்துள்ளாகுகின்றன. குறிப்பாக கம்யூனிச சித்தாங்களை, தத்துவார்த்தங்கள் குறித்து இந்நாவல் சற்றுக் கடுமையாகவே விமர்சிக்கிறது எனலாம்.

நாவலில் கம்யூனிஸ்ட் நம்பி கூறுவதாக வரும் கீழ்கண்ட உரையாடல் மிக முக்கியமானது.

”முகுந்தன், மதம் நமது நாட்டில் மிகப் பெரிய உண்மை. அது நாம கண்ணை மூடிகிட்டா மறைஞ்சி போயிடாது. நாம் அநியாயத்தை எதிர்த்துப் போராடறதுக்கு மதம் உதவியா இருக்கும்னு நினைச்சா அதோடு கை குலுக்க நாம தயங்கக் கூடாது. காந்தி இதைத்தான் அவர் பாணில, கொஞ்சம் குழப்பமான முறைல செய்ய நினைச்சாரு."

“மதத்தை அணைச்சிகிட்டா மதம் நம்மையே மாத்திடும். முதல்ல நல்லா இருக்கும். ஆனா நம்மோட சொந்த ஆத்மாவைக் கரையேத்தற முயற்சில நாம மக்களை மறந்திடுவோம். அவங்க பிரச்சனைகளை மறந்திடுவோம்” என்ற முகுந்தனின் எதிர்வினை, தற்போதைய அரசியல்வாதிகளின் போலித்தனத்தை, தப்பிக்கும் மனப்பான்மையை, அப்பட்டமான சுயநலப்போக்கை, தங்கள் சுயலாபத்துக்காக மட்டுமே மதத்தைக் கையாள்வதைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

அது போன்று வீட்டை விட்டு வெளியேறிய நம்மாழ்வார், சகோதரன் பட்சிராஜனுக்கு எழுதும் கடிதமும் மிக முக்கியமானது.

“சுயராஜ்யம் புளித்து போன ஒரு கனவாக எனக்குப் படுகிறது. கடவுள் அவர்கள் பக்கம். எதிர்க்க எனக்கு விருப்பமில்லை. வரப்போகும் தலைமுறைகள் வரையும் தியாகிகளின் பட்டியலில் என் பெயர் வரும் என்பதற்காக நாயைப் போலச் சாக நான் தயாராக இல்லை” என்ற வரிகளில் அக்கால இளைஞர்கள் சிலரது மாறுபட்ட மனநிலை வெளியாகிறது.

மற்றுமொரு முக்கியமான கடிதம் நம்பி, இறப்பதற்கு முன் கண்ணனுக்கு எழுதும் கடிதம்.

”தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் இந்த வாழ்க்கையால் என்ன பயன்? ஒரு வடிகட்டின முட்டாளின் நினைவாற்றலைக் கொண்டிருக்கும் மக்களுக்கு உழைப்பதால் என்ன லாபம்? நிறைவேறவே முடியாத கொள்கைகளைக் கட்டிக் காப்பதில் என்ன கிடைக்கப் போகிறது?” - சமூகத்தின் சுயநலப் போக்கையும், அதன் சகிக்க முடியாத இன்னொரு முகத்தையும் பற்றி ஆழ்ந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்டப்படும் இந்த வரிகள் ஒரு நம்பிக்கையில் தோற்றுப்போனவனின் உண்மையான வாதமாகக் கருதத்தக்கது.

கம்யூனிஸ்ட்கள் குறித்த கீழ்கண்ட வரிகள் வாசக அதிர்ச்சியை ஏற்படுத்துபவை.

”அட்டையை எடுத்துட்டா புஸ்தகமெல்லாம் காத்தால்ல இருக்கு”, ” இந்த கம்யூனிஸ்ட் போர்வையை என்னிக்கு நீ தூக்கிப் போடறியோ அன்னிக்கு தான் உருப்படுவே”, “கம்யூனிஸ்டா, உள்ளத்திலேயே அழுகி வீச்சம் அடிக்கற பயலுங்க அவங்க தான்”.

”இருங்க. தலகாணி இல்லையா. இடுப்புக்கு அண்டக் கொடுக்கணும்ல... தென்பட்டது லெனின்.... புஸ்தகங்களை தன்னுடைய ரவிக்கையால் மூடினாள். படுத்துக் கொண்டு அவனை அழைத்தாள்...”

”லெனினுக்குச் சேதமில்லை. இரண்டாம் பாகத்தின் நீல அட்டைதான் சிறிது கசங்கிய மாதிரி இருந்தது”

மேற்கண்ட வரிகளினூடே இந்நாவல் கூறும் நுண்ணரசியல் பல. எல்லோருக்கும் நல்லவனாக வரும் நம்பியின் மறைவு அதிர்ச்சியை அளிப்பது மட்டுமல்ல; அதற்கு எந்த எதிர்ப்பலைகளும் எழாமல் இருப்பதே புரையோடிப் போன சமூகத்தின் இன்னொரு முகத்தைக் காட்டுவதாக உள்ளது.

கையாலாகாத, பொருந்தாத வெற்றுக் கூச்சல் எழுப்பும் நபராக வரும் நரசிம்மனின் பாத்திரமும் இங்கு முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்றாகும். ’பிராமணர்களுக்கு தனிதேசம் வேண்டும்’ என்ற அவனது அபத்தப் பேச்சு குறியீடாக வேறு ஏதோ ஒன்றை ஞாபகப்படுத்துகிறது.

பெரியார், நரசிம்மன் வசிக்கும் சன்னதித் தெருவில் பேச வந்தபோது முன்வைக்கப்பட்டிருக்கும் காட்சிப்படுத்துதல்கள் மிக முக்கியமானவை. அதுவும் ‘யகாஸகௌ சகுந்தகா...’ எனத் தொடங்கி சுக்ல பக்ஷ யஜூர்வேதத்தில் வருவதாகச் சொல்லப்படும் ஸ்லோகத்தை பேச்சாளர் கூறக் கேட்டதும் அதை உடனடியாகப் படிக்க ஆவல் கொள்ளும் நரசிம்மனின் போக்கு அவனது குணாதிசயத்தைத் தெளிவுறக்காட்டி விடுகிறது.

கடைசியில் மலம் சுத்தம் செய்யும் பெண்ணை உறவுக்கு அழைக்க, அவளால் முகத்தில் மலம் அப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான். ஆனால் அவன் இறுதி ஊர்வலத்தில் அதே பெண், சுடுகாடு வரை ஒப்பாரி வைத்துக் கொண்டே செல்வதாக வருவது கதையோடு ஒட்டவில்லை.

ரோசாவின் பாத்திரப்படைப்பும் கவனத்தில் கொள்ளத் தக்கது என்றாலும் அது பிறப்பு முதல் உடன் வளர்ந்த இயல்பான ஒன்றாகவே இருப்பதால் வியப்படைய ஏதுமில்லை.

நாவலின் ஊடாக வந்து போகும் சர்வாங்க சவர ஜெர்மன் ஐயங்கார், விக்டோரியா ராணியின் மரணத்துக்காகக் குளித்த, பொன்னாவை எப்படியாவது வளைத்துப் போட முயற்சித்த வக்கீல் ஐயங்கார், ஆண்டாளைக் கட்டிப்பிடித்த அவர் பையன், நள்ளிரவில் தூரம் ஒதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட ஆண்டாளை அரவணைத்த அய்யராத்து குடுமிப் பையன், எப்போதும் கற்றாழை நாற்றம் அடிக்கும் தினமொட்டு நிருபர் சங்கரராமன், வாய் ஓயாமல் ஆங்கிலம் பேசிக் கொண்டும், அவ்வப்போது திருமலையிடம் வந்து நாசிகா சூரணம் யாசித்தும், சமயங்களில் நிர்வாணமாகத் தெருக்களில் சுற்றிக் கொண்டும் இருக்கும் மனநிலை பிறழ்ந்த வக்கீல் ராமசாமி அய்யர், வயதிற்கு மீறிய தெளிவுடன் இருக்கும் கண்ணனின் தங்கை ராதா என்று கிருஷ்ணன் நம் முன்னால் காட்சிப்படுத்தும் மனிதர்கள் நாவலில் எந்தவித மிகைப்படுத்துதலும் இல்லாமல் இயல்பாகவே வந்து போகிறார்கள்.

நாவலில் ஆங்காங்கே அடிக்கும் ‘கற்றாழை வாடை’யின் வீச்சம் சற்றே அதிமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
காந்தீயம், கம்யூனிஸம், மத நம்பிக்கை, குரு விசுவாசம், சமூக சேவை, திராவிட இயக்கங்கள், வரலாற்று விமர்சனம் என்று பல தடங்களை இந்நாவல் தொட்டுச் செல்கிறது. இது உணர்வு சார்ந்த நாவலா, அரசியல் சார்ந்த நாவலா என்று பார்த்தால் உணர்வு சார்ந்த அரசியல் நாவல் என்று தாராளமாகச் சொல்லி விடலாம். புரட்சி என்பது இன்று ஒரு நகைப்புக்குரிய சொல்லாக மாறி விட்டதற்கு யார் காரணம் என்பதை இந்த நாவல் சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று கூறாமல் செல்வதே ஒருவிதத்தில் நாவலின் பலம் என்றும் சொல்லலாம்.

நாவல் கூறும் மையக் கருத்தாக இதைக் கொள்ளலாம். ஒருவன் கொள்கை வீரனாக வாழ்கிறான். ஆனால் கடைசியில் அந்தக் கொள்கைக்காகவே உயிரை விடுகிறான், எந்தப் பயனுமில்லாமல். மற்றொருவனோ, வாழ்க்கையை யதார்த்தமான அதன் போக்கில் எதிர் கொள்கிறான். வளைந்து கொடுத்துப் போகப் பழகிக் கொள்ளும் அவன், இறுதியில் எந்த விதக் கொள்கைப் பிடிப்புமில்லாது, முடிவு எடுக்கக் கூடத் தயங்கும் சராசரி மனிதனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர் கொள்கிறான். யதார்த்தத்தில் இப்படிப்பட்ட மனிதர்களே எங்கும் காணக் கிடைக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; அவர்களே தங்கள் வாழ்வனுபவத்தால் தங்களை உருமாற்றிக் கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதே உண்மை. அது அரசியலாகட்டும், சினிமாவாகட்டும், ஆன்மீகமாகட்டும் எங்கும் நாம் இப்படிப்பட்ட கண்ணன்களை அதிகம் பார்க்கலாம். கண்ணன்களே நாளடைவில் கம்சர்களாக மாறுவது தான் வாழ்க்கையின் குரூரம் அல்லது யதார்த்தம்.

மொத்தம் பதினெட்டு அத்தியாயங்களில் இந்த நாவலைப் படைத்திருக்கும் நமது பாராட்டுகுரியவர். தடை நடையே இல்லாமல் செல்வது நாவலின் வெற்றிக்குச் சான்றாகிறது. உணர்வுரீதியாக சொற் சித்திரம் தீட்டியிருக்கிறார் எனக் கூறின் அது மிகையில்லை. தாமிரபரணி ஆறு, சுலோசன முதலியார் பாலம், நாங்குநேரிக் குளம், வண்ணார் பேட்டை பங்களா, குற்றால அருவி என காட்சிப்படுத்துதல்களும் விவரணைகளும் வெகு இயல்பாக இருக்கிறது.

ஆரம்பம், நடு, முடிவு என்று நாவலின் முழுமையான அம்சங்கள் கொண்டிருந்தாலும், நாவல் இறுதியில் ’சென்று தேய்ந்து இருதல்’ என்னும் வகையிலேயே அமைந்திருக்கிறது. சொல்லப்போனால் நம்பியின் மரணத்தோடு, நம்மாழ்வார் திரும்ப வந்து குடும்பத்துடன் இணைவதோடு நாவல் ஒருவிதத்தில் முற்றுப் பெற்று விடுகிறது எனலாம். மற்றொரு விதத்தில் பார்த்தால் நாவல் முடியவில்லை, கண்ணனின் டில்லி பயணத்தோடு தற்காலிகமாக முடிந்திருக்கிறது அவ்வளவே! கண்ணனின் டில்லி வாழ்க்கை, சீக்கியர் பிரச்சனை, சாகித்ய அகாதமி விவகாரம், டில்லி அரசியல், காந்திகளின் எழுச்சி-வீழ்ச்சிகள், கழகங்களின் வீழ்ச்சி என்று சமகாலச் செய்திகளை கண்ணன் மூலமாகப் பதிவு செய்ய கிருஷ்ணனுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. புலிநகக் கொன்றையின் இரண்டாம் பாகத்தை தாராளமாக எதிர்பார்க்கலாம்.

பறவைகள் கிளைகளில் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கலாம். பூக்களை அழிக்கலாம். சில நேரங்களில் அமைதியாகவும் இருக்கலாம். ஆனால் மரம் அதனால் எல்லாம் பாதிக்கப்படுவதில்லை. அது அமைதியாய் அனைத்திற்கும் சாட்சியாய் இருந்து நடப்பனவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களும் அப்படித்தான். வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் இது எதனாலும் பாதிக்கப்படாத காலம், எல்லாவற்றிற்கும் சாட்சியாய் இருக்கிறது, புலிநகக் கொன்றையைப் போலவே!

புலிநகக் கொன்றை
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி.சாலை
நாகர்கோவில் - 629001

Tuesday, August 4, 2009

பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை - ஒரு பார்வை - பகுதி - 1

"எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே..."


சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில், மருதத் திணையின் ஞாழல் பத்தில் 142வது பாடலாக இடம் பெற்றிருக்கிறது மேற்கண்ட பாடல். ’ஞாழல்’ என்பது புலிநகக் கொன்றை மரத்தைக் குறிக்கும்.

’தோழி கேள். எவனுடைய நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை இனி நான் நினைக்க மாட்டேன். என் கண்களுக்குச் சிறிதாவது தூக்கம் கிடைக்கட்டும்’ என்பது பாட்டின் பொருள்.

பி.ஏ.கிருஷ்ணன் அவர்களால் ‘Tiger claw tree’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்ற நூல், தமிழில் ’புலிநகக் கொன்றை’ என்ற பெயரில் வெளியாகி சிறப்பான கவனத்தைப் பெற்றது. அசோகமித்திரனால், ‘ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற தமிழ்நாவல்’ என்று பாராட்டையும் பெற்ற இந்நூலை, தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான இலக்கியப் படைப்புகளுள் ஒன்று எனக் கூறலாம்.

1970ல் ஆரம்பித்து முன்னோக்கியும் பின்னோக்கியுமாக நகர்கிறது நாவல். தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் நான்கு தலைமுறைகளை கதைக் களமாகக் கொண்டு நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொன்னா-ராமன் தம்பதியினரின் குடும்ப வாழ்க்கையில் ஆரம்பித்து, அப்படியே சிப்பாய் கலகம், கட்டபொம்மு கிளார்க்கைக் கொன்றது, பாஞ்சாலக் குறிச்சி வீழ்ந்தது, கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டது, மருதுபாண்டியரின் அதிரடி அறிவிப்புகள், ஆஷ் கொலை, வாஞ்சிநாதன் தற்கொலை என்ற வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் கதையினூடே சம்பவங்களாக, வாழ்க்கை நிகழ்ச்சிகளாகக் கண்முன் விரிகின்றன. சுதந்திரப் போராட்டம், அதற்குப்பின் நடந்த இந்திய அரசியல் சமூக மாற்றங்கள், அதன் பின்னணிகள் என விரிகிறது கதை.

நான்கு தலைமுறைகளைப் பற்றிய கதை என்பதால் நாவலில் ஏகப்பட்ட விவரணைகள் கொட்டிக் கிடக்கின்றன. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிப்பதன் மூலம் நாவல் காட்டும் பல்வேறு காலகட்டத்து மக்களின் வாழ்க்கை முறை, சமூகப் பின்னணிகள், நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என பலவற்றை அறிந்து கொள்ள இயலுகிறது. நூல் உருவாக்கத்திற்காக ஆசிரியர் செய்திருக்கும் கடுமையான உழைப்பும் கண்முன் தெரிகிறது.

நாங்குநேரி ஜீயரின் மடப்பள்ளியில் புளியோதரைப் புலியாக விளங்கும் ஐயங்காரின் மகள் பொன்னா என்கிற பொன்னம்மாள். அவளுக்கும் பிரபல உண்டியல்காரக் குடும்பத்து லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் செல்ல மகன் ராமன் என்கிற ராமன் ஐயங்காருக்கும் வானாமாமலை பதினெட்டாம் பட்ட ஜீயரின் ஆசிர்வாதத்தோடு திருமணம் நடக்கிறது. நம்மாழ்வார், பட்சி என இரு ஆண் மகவுகளுக்கும், ஆண்டாளுக்கும் தாயாகிறாள் பொன்னா. சாப்பாட்டுப் பிரியனான ராமனுக்கு மதுப் பழக்கமும் விரும்பத்தக்கதாயிருக்கிறது. ஆண்டாளுக்குத் திருமணமான கையோடு அவள் கணவன் குளத்தில் மூழ்கி இறந்து விட விதவையாகிறாள். ராமன் ஐயங்கார் அவளுக்கு மறுமணம் செய்ய நினைக்க, ஜீயர் அதை ’குல ஆச்சாரத்துக்கு விரோதம்’ என்று சொல்லித் தடுக்க, அந்தச் சோகத்திலேயே ராமனும் இறந்து விடுகிறார். பொன்னா தனியளாகிறாள்.

நம்மாழ்வாரையும் பட்சியையும் வளர்த்து ஆளாக்க, நம்மாழ்வாருக்கு காங்கிரஸ் கட்சியின் மீதான் அபிமானம் அதிகமாகிறது. ஆனால் காந்தியத்தை விட, புரட்சியே உயர்ந்தது என நினைக்கிறான். திலகரின் கொள்கைகள் அவனை ஈர்க்கிறது. திலகரை மாதிரி நான்கைந்து தலைவர்கள் இருந்தால் போதும். மூட்டை முடிச்சுக்களோடு வெள்ளைகாரன் கப்பல் ஏறி விடுவான் என்பது அவன் எண்ணமாக இருக்கிறது. வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமண்ய பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி வ.வே.சு அய்யர், வாஞ்சி என எல்லோரையும் சந்திக்கிறான். பாரதமாதா சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறான். பொன்னாவின் தூண்டுதலால் லட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள, அவளோ, மது என்ற மதுரகவியைப் பெற்றுக் கொடுத்து விட்டுக் காலமாகி விடுகிறாள். தனியனாகிறான் நம்மாழ்வார். இந்தியா புரட்சியால் விடுதலை பெறும் என்கிற அவன் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்கிறது.

ஏற்கனவே தளர்ந்திருக்கும் அவனை பொன்னா மறுமணத்திற்குத் தூண்ட, மறுத்து விட்டு, விரக்தியுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். வடநாட்டுக்குச் சென்று ஜோஷி மடத்தில் சேர்ந்து அவன் சாமியாராகி விட, அவன் வருவான் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்துகிறாள் பொன்னா.

நம்மாழ்வாரது மகன் மதுரகவியை அத்தை ஆண்டாள் வளர்க்கிறாள். பின் வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தில் சேர்க்கப்படுகிறான் மது. கதையினூடாக குருகுலத்தில் நடந்த ’பந்தி வஞ்சனை’ சம்பவங்கள் விளக்கப்படுகின்றன. அடுத்து பாபாநாசம் மலை அருவியில் மதுவின் கண்முன்னே அய்யர் இறந்து படுகிறார். நாளடைவில் காந்தியின் சித்தாந்தங்கள் பிடிக்காமல் போகிறது மதுவுக்கு. கம்யூனிஸம் ஈர்க்கிறது. கமலாவுடன் கல்யாணமும் நடக்கிறது. ஒரு பொதுவுடைமைப் போராட்ட ஊர்வலத்தில் இறந்துபடுகிறான் மது.

பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பிரபலவழக்கறிஞர், ராஜாஜியின் அபிமானியும் கூட. ஆண்டாளோ சித்தம் தடுமாறி மனநோய் விடுதியில் சேர்க்கப்பட்டு இறந்து போய் விடுகிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன். திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் கலெக்டருக்கு எதிராகப் பேசி வேலையை இழக்கிறான். அவனுக்கு பம்பாய்க்காரி உமாவின் மீது காதல். உமா அவனை ஐ.ஏ.எஸ். படிக்கச் சொல்கிறாள். கண்ணன் வழக்கம் போல சோம்பேறியாக இருக்கிறான்.

மதுவிற்கு பிறந்த நம்பி, ரோசா என்னும் உடல் ஊனமுற்ற வேற்று ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறான். டாக்டராக இருக்கும் இருவரும் மக்கள் சேவையாற்றுகின்றனர். நம்பி கம்யூனிஸ்ட் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவனாக இருக்கிறான்.

இறந்துபோய் விட்டதாக அனைவராலும் கருதப்பட்ட நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைக்க, நம்பி அவரைச் சந்திக்க அங்கே செல்கிறான் - நாவலில் இந்தச் சந்திப்பு மிக முக்கிய இடம் பெறுகிறது - அவனிடம் பின்னர் தான் அங்கு வந்து சேர்வதாகக் கூறுகிறார் நம்மாழ்வார்.

குற்றாலம் செல்லும் நம்பி, பூர்வீக ஊரான புனலூருக்குச் செல்கிறான். நக்சலைட் என்ற உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைப் செய்யப்படுகிறான் - அப்போது வெளிப்படுத்தப்படும் நம்பியின் சிந்தனைகளும், உரையாடல்களும் நாவலை வேறொரு தளத்தை நோக்கி நகர்த்துகிறது என்றால் அது மிகையில்லை - பின்னர் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்படும் நம்பி, மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். செய்தி கேட்டுக் குடும்பம் அதிர்ச்சியடைகிறது. ஒரு கள்ளி படர்ந்த திருவனந்தபுரம் சுடுகாட்டில் நம்பி புகைந்து போகிறான், அவன் லட்சியங்களைப் போலவே.

ஜோஷி மடத்திலிருந்து புறப்பட்டு, தல யாத்திரை செய்து கொண்டே ஊருக்குத் திரும்பி வரும் நம்மாழ்வார், தன் குடும்பத்தினரைச் சந்திக்கிறார். நம்பி இறந்து போன சம்பவங்களைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போகிறார். படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னாவோ பிள்ளை நம்மாழ்வாரை அடையாளமே கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்.

கண்ணன் ரோசாவை மணம் செய்து கொள்ள வேண்டுகிறான் அவள் மறுத்து விடுகிறாள். இறுதியில் நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையுடனும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார். உமாவின் நினைவுடன் கண்ணன் ஐ.ஏ.எஸ்.தேர்வு முடித்து டெல்லி செல்கிறான்.

இதுதான் 300 பக்கங்களுக்கு மேற்பட்ட புலிநகக் கொன்றையின் கதைச் சுருக்கம்.
(தொடரும்)

Monday, August 3, 2009

”நலம் தரும் சொல்” - சிறுகதைக் குறுந்தகடு விமர்சனம்


சிறுகதை ஆசிரியரும் நல்ல சிறுகதை ரசிகருமான திரு பூரம். சத்தியமூர்த்தி அவர்கள், தனது பூரம் சிறுகதை ரசிகர் மன்றத்தின் சார்பாக ‘நலம் தரும் சொல்’ என்ற தலைப்பில் தேர்ந்தெடுத்த தனது சிறுகதைகளை குறுந்தகடாக வெளியிட்டிருக்கிறார்.

சிறுகதைகள் என்பன நடையால், கருப்பொருளால், இலக்கிய உத்திகளால், பாத்திரப் படைப்புகளால், சொல்லும் விதத்தால் சிற்ப்புறுகின்றன. நம் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கின்றன. அந்த வகையில் திரு பூரம் அவர்கள், தான் எழுதி பரிசுகள் பெற்ற சிறப்புச் சிறுகதைகளான ’நலம் தரும் சொல்’, ’சங்கரம்’, ’ஸ்தல விருக்ஷம்’, ’அந்தி வேளை’ என்னும் நான்கினையும் நம் செவிக்கு விருந்தாகும் குறுந்தகடாக்கி அளித்திருக்கிறார்.

’நலம் தரும் சொல்’ கதாநாயகனின் நினைவோட்டத்தில் விரிகிறது. ’சர்ரியலிஸம்’ எனப்படும் ’ஆழ்மன இயல்பியல்’ உத்தியில் இக்கதை சிறப்புறுகிறது. துறவறம் மேற்கொள்ள வேண்டிய இலட்சியத்தில் திருத்தல யாத்திரைகளை மேற்கொண்டிருக்கும் கதாநாயகனின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது. காஷாய ஆடை தரிக்க விரும்புவன், கல்யாண மாலை பூண நினைக்கிறான். அந்தக் காதல் நிறைவேறியதா, இல்லை அவன் லட்சியம் நிறைவேறியதா என்பதை தனக்கே உரிய பாணியில், மிகச் சிறப்பாக வருணனைகளைக் கையாண்டு நலம் தரும் சொல்லாக நயம் பட உரைத்திருக்கிறார் ஆசிரியர். பாம்பே கண்ணன் கதாநாயகனாகவே மாறி களிக்கிறார், மருகுகிறார், மயங்குகிறார், பதறுகிறார், கலங்குகிறார். நம்மை கதை நடக்கும் திருமாலிருஞ்சோலைக்கே அழைத்துச் சென்று விடுகிறார் என்றால் அது மிகையில்லை. உறுத்தாத பின்னணி இசையும், தெளிவான, உச்சரிப்புச் சுத்தத்துடன் கூடிய பின்னணிக்குரல்களும் ஒரு நாடகம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன.

அடுத்த கதை சங்கரம். காதலும் இசையும் கலந்த இனிய சிறுகதை. கதாநாயகன் ஒரு அநாதை. அவனை அன்புகாட்டி வளர்க்கும் மாமாவுக்கும், மாமிக்கும் என்றும் நன்றியோடு இருக்க விரும்புகிறான். அவர்களின் ஒரே மகள் கல்யாணி. மாமி திடீரென்று மறைய, சங்கரன் மனமொடிந்து போகிறான். கல்யாணி கவலையில் வீழ்கிறாள். அவளுக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்வதை தனது கடமையாக நினைக்கிறான். சங்கரன். ஆனால் கல்யாணியோ அவனையே மணம் செய்து கொள்ள நினைக்கிறாள். சங்கரன் அதை மறுக்கிறான். பின்னர் சம்மதிக்கிறான். திடீரென அவன் மாமா, அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்திருப்பதாகவும், வேறு இடத்தில் சென்று தங்கிக் கொள்ளுமாறும் கூறுகிறார். அவர் கூறுவதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட சங்கரன், கல்யாணியின் மீதான காதலைத் துறந்து இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேற நினைக்கிறான்.

அதன் பின் என்ன நடக்கிறது, கல்யாணிக்கும் அவனுக்கு திருமணம் நடந்ததா இல்லையா என்பதை ”சங்கரம்” என்னும் தலைப்பில் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். சாதாரண கதைதான், ஆனால் அதைச் சொல்லியிருக்கும் விதத்தில், காட்சிகளின் சித்திரிப்பில் இது சிறப்பான கதையாகிறது. பின்னணிக் குரல்கள் இச்சிறுகதைக்கு பக்கபலமாக இருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியமான சிறுகதை ஸ்தல விருக்ஷம். குடும்ப உறவுகளை, அண்ணன் தங்கை பாசத்தை, நகர வாழ்க்கையின் உதாசீனத்தை, பணம் வந்தால் மனிதர்கள் மாறிப் போய் விடுவதை உணர்ச்சி பொங்கக் கூறும் சிறுகதை இது. ஆனால் கதையில் மைய இழையாக இருப்பது ’சாதி’ இறைவன் படைப்பில் அனைவரும் சமமே! ஆனால் மனிதர்கள் தங்கள் தவறான புரிதல்களினாலும், கற்பிதங்களினாலும் தங்களுக்குள் உயர்வு, தாழ்வு கருதிக் கொள்கின்றனர். சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தக் கதை ஒரு முதலியார் பெண் எப்படி ஐயங்கார் பெண்ணாக மாறுகிறாள் என்பதைச் சுட்டுகிறது எனலாம். அல்லது ஒரு மகள் எப்படி மருமகள் ஆகிறாள் என்பதை விளக்கும் கதை என்றும் கூறலாம்.

சுதர்சனன் தன் தங்கை மங்கையின் மீது உயிரையே வைத்திருக்கிறான். பக்கத்துவீட்டில் வசிக்கும் முதலியார் பெண் மாணிக்கவல்லியையும் சமமாகவே பாவிக்கிறான். மாணிக்கவல்லியின் பெற்றோர்கள் அடுத்தடுத்து இறந்து விட, அவள் சுதர்சனன் வீட்டில் தஞ்சமடைகிறாள். படிப்படியாக தனது நடத்தைகளால் அவர்கள் குடும்பத்துள் ஒருத்தியாக மாறுகிறாள். மங்கை திருமணமாகிச் செல்கிறாள். நகரவாழ்க்கையின் டாம்பீகமும், அவள் பாசத்திற்கு விலையாகிறது. பிறந்த குடும்பத்துடன் ஒட்டுதலும், தொடர்பும் இல்லாமல் போய் விடுகிறது. சுதர்சனின் தாய் படுத்த படுக்கையாகி விட, அவளுக்கு மகள் போல் இருந்து எல்லாச் சேவைகளையும் செய்கிறாள். சுதர்சனனுக்கும், மாணிக்கவல்லியின் மீதான இரக்கம் சுதர்சனனுக்கு காதலாக மாறுகிறது. அவளையே மணமுடிக்கப் போவதாக தாயைப் பார்க்க வந்த மங்கையிடம் சொல்கிறான். அவள் சாதி வித்தியாசம் பாராட்டிக் கோபித்துக் கொண்டு சென்று விடுகிறாள்.

தாய் இறக்கும் முன்பு, மாணிக்கவல்லியையே திருமணம் செய்து கொள்ளுமாறு சுதர்சனனிடம் சொல்கிறாள். மேலும் அவள், ‘பகவானைச் சரணடைந்து உண்மையான பக்தி செய்பவர்கள் எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவர்கள் தான். மாணிக்கவல்லியும் இந்த வீட்டுப் பெண் தான். ஸ்ரீ வைஷ்ணவ குலப் பெண் தான்’ என்று சொல்லி இருவரையும் ஆசிர்வதித்துக் கண்ணை மூடுகிறாள். ஜாதி வித்தியாசம் பிறப்பினால் ஏற்படுவதில்லை. அவரவர்களது நடத்தையால் தான் அது தீர்மானிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது இக்கதை. மாணிக்க வல்லியின் பாத்திரம் மறக்க முடியாத ஒன்று. பாத்திரப்படைப்பால், கதை மாந்தர்களால் இந்தச் சிறுகதை சிறப்புறுகிறது.

அடுத்து வரும் ’அந்திவேளை’ கிராமத்தைப் பின்புலமாகக் கொண்டது. வெகு சாதாரணமான கதை. கிராமத்தில் மிகப் பணக்காரக் குடும்பங்கள் இரண்டு. ஒற்றுமையாக இருந்த அக் குடும்பங்கள் ஏதோ காரணத்தால் பிரிந்து, பேச்சு வார்த்தையே இல்லாமல் போய் விடுகிறது. கதையின் தலைவிக்கு, பிரிந்து போன அந்தக் குடும்பத்தின் வாரிசு மீது காதல். மேலும் ஏதோ காரணத்தால் பிரிந்த அந்த இரண்டு குடும்பங்களையும் ஒன்று சேர்க்கவும் அவள் விரும்புகிறாள். ஏன் அந்தக் குடும்பம் பிரிந்தது, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா, மீண்டும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்தனவா என்பதை ஒரு நாடகம் போன்று இந்தக் கதை விளக்குகிறது. இந்தக் கதைப் பொருளை அடிப்படையாக வைத்து நிறைய திரைப்படங்கள், நாடகங்கள் உருவாக்கியிருக்கின்றன. என்றாலும் பண்டாரம், அம்மன் அருள், மல்லிகை வாசம் என்றெல்லாம் சேர்த்துக் கோர்த்து கதைக்கு ஒருவித மாந்திரீக யதார்த்தத் தன்மையைக் கொண்டு வந்திருகிறார் ஆசிரியர்.

நான்கு கதைகளுமே மிக நன்றாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல குரல் வளத்துடன் கூடிய பின்னணிக் கலைஞர்கள் பங்களித்திருக்கிறார்கள். உறுத்தாத பின்னணி இசை சிறுகதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது. ஒரு நாடகம் பார்க்கும் மனநிறைவை இந்தக் குறுந்தகடு அளிக்கிறது என்றால் அது மிகையில்லை. பாம்பே கண்ணன் குழுவினருக்குப் பாராட்டுகள்! பூரம் சத்தியமூர்த்திக்கு வாழ்த்துகள்! எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அளித்திருக்கும் பி.வெங்கட்ராமன் சிறுகதை ஆர்வலர்களின் நன்றிக்குரியவர்.

பத்திரிகை ஊடகங்களில் சிறுகதைகள் வெளிவருவதே அருகி விட்ட காலத்தில், சிறுகதைகளுக்கான வாசகர்கள் எண்ணிக்கையே குறுகிப் போய் விட்ட கால கட்டத்தில், குறுந்தகடாக அதுவும் 1960-70களில் வெளிவந்த சிறுகதைகளை வெளிக் கொணர்ந்திருப்பது தைரியமான முயற்சி. ஆனால் தற்போதைய இளம் தலைமுறை வாசகர்கள் இது போன்ற குறுந்தகடுகளை வாங்கி ஆதரிக்கக முன்வருவார்களா? சிறுகதை ரசிகர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

தொடர்புக்கு
பூரம் சத்திய மூர்த்தி – 9444452202
பி.வெங்கட்ராமன் – 9841076838

குறுந்தகடு கிடைக்குமிடம்
பாம்பே கண்ணன்
17/டி, (30/டி) சுமந்த் அபார்ட்மெண்ட்,
தேவநாதன் தெரு,
மந்தவெளி, சென்னை-28
கைப்பேசி – 9841153973
bombaykannan@hotmail.com