Showing posts with label பிரியவாதினி. Show all posts
Showing posts with label பிரியவாதினி. Show all posts

Monday, August 24, 2009

பிரியவாதினி - 3 & 4

3

‘சிசிரருது' தொடங்கும்போது ஒருநாள் பகலில் பாடத்தை முடித்தவுடன் குணசேனன், ஆசார்யரிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.


‘ஸ்வாமி ஒரு விக்ஞாபனம், அடியேன் ஸ்ரீபுரத்தை விட்டுவந்து வெகுகாலமாகி விட்டது. என்னுடைய வயதான தாய், தந்தையர் என்னைக் காண ஆவலுடன் இருப்பார்கள். தங்கள் அனுமதியின் பேரில் நான் ஒரு தடவை என் தாய் தந்தையரை வணங்கி விட்டு ஒரு மாத காலத்தில் திரும்பி வருவதாக யோசனை உதித்திருக்கிறது. தாங்கள் அனுமதி வழங்க வேண்டும்.'


‘குணசேனா, மங்களம் உண்டாகட்டும். விரைவில் திரும்பிவர வேண்டும்' என்று ஆசிர்வதித்தார் ஆசார்ய தேவர்.


குணசேனன் அன்று மாலையில் குடிலுக்குத் திரும்பி வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே சதங்கை ஒலி கேட்டது.


‘பிரியவாதினி, வரவேண்டும்... ஏன் சற்று வாட்டமுற்றிருக்கிறாய்' என்று கேட்டான் குணசேனன்.


‘ஒன்றுமில்லை ஸ்வாமி' என்று சொல்லி பிரியவாதினி சற்று மௌனமாக இருந்தாள்.


‘பிரியவாதினி, நீ எப்போதும் போல மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை'


‘ஸ்வாமி, இந்த ஏழை உங்களிடம் ஓர் வேண்டுகோள் விடுக்கலாமா?'


‘நிச்சயமாக, நான் செய்யக் கூடிய உதவி என்ன இருக்கிறது?'


‘ஸ்வாமி, தாங்கள் இப்பொழுது ஸ்ரீபுரத்திற்கு அவசியம் செல்ல வேண்டுமா?' -பிரியவாதினியின் அழகிய விழிகளில் ஆழங்காண முடியாத தாபமும், கவலையும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன!


‘ஆமாம். என்னுடைய வயதான தாய், தந்தையர் இவ்வளவு மாதங்களாக என்னிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் மிகவும் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். நான் அவர்களைக் கண்டு, ஆசி பெற்று, உடனே திரும்பி விடுவேன்.'


பிரியவாதினி சில கணங்கள் மௌனமாக நின்றாள்.


‘ஸ்வாமி! இந்த ஏழையையும் தாங்கள் அழைத்துச் செல்ல முடியாதா?...' என்று கேட்ட பிரியவாதினி விம்மல்களோடு அவன் காலடியில் விழுந்து வணங்கினாள்.


குணசேனன் பதறிப்போனான்!


‘ஸுகுமாரி!.. நீ வீணாகக் கலங்க வேண்டாம். நான் விரைவில் திரும்பி வருகிறேன்!


அவன் முகத்தில் சொல்ல முடியாத வேதனை படர்ந்தது.


‘ஸ்வாமி! தாங்கள் இல்லாமல் என்னால் ஒரு கணமும் இருக்க இயலாது என்று தோன்றுகிறது!...' என்று விம்மினாள் பிரியவாதினி.


‘ நானும் உன்னை விட்டு பிரிய விரும்பவே இல்லை. இப்போது நீ எனக்கு விடை கொடு, விரைவில் நான் திரும்பி வருகிறேன்' என்றான் குணசேனன்.



4



‘ சிசிரருது' முடிந்து ‘வசந்தருது' தொடங்கும் போது ஒவ்வொரு நாளும் மாலைவேலையில் பிரியவாதினி ராஜபாட்டையில் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள்! இரண்டு மாதங்கள் ஆகியும் குணசேனனைக் காணவில்லை! குணசேனனின் நண்பன் வித்யாதரனும் அனுமதி பெற்று ஸ்ரீபுரம் போயிருந்தான்! இவர்களைப் பற்றிய விவரம் யாரிடம் கேட்பது என்று அவளுக்குப் புரியவில்லை!


இப்படிப்பல மாதங்களாகியும் குணசேனன் திரும்பி வரவில்லை. இந்த வருடம் வசந்த ருதுவின் தொடக்கத்தில் பல்லவச் சக்கரவர்த்தியிடமிருந்து மதங்க முனிவருக்கு ஓர் அழைப்போலை வந்தது. காஞ்சித் தலைநகரில் நடனக் கலை விழா ஏற்பாடாகியிருப்பதாகவும், மதங்க முனிவர் தன் நடன கலைஞர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சக்ரவர்த்தி அழைப்பு விடுத்திருந்தார். வைகாசி மாதத் தொடக்கத்தில் சக்கரவர்த்தி தேர்கள் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.


செய்தி கேட்டு பிரியவாதினி சற்றே தெளிவடைந்தாள்.


‘காஞ்சித்தலைநகருக்குப் போனால் அதற்கருகே உள்ள ஸ்ரீபுரத்தில் குணசேனனை சந்திக்க இயலுமல்லவா?, அப்படியே குணசேனனும் அந்த நடன நிகழ்ச்சிக்கு வராமல் இருப்பாரா?'


வைகாசி மாதத்தில் தேர்கள் வந்து விட்டன. காஞ்சிக்குக் கிளம்பும் முன் பிரியவாதினி ஆச்சார்யரை அடிபணிந்து ‘ஸ்வாமி! என்னுடைய அந்தரங்கத்தை தங்களிடம் சொல்லியே ஆக வேண்டும்!... அந்த குணசேனன் இன்னும் திரும்பி வரவில்லை. அவரில்லாமல் என்னால் வாழ முடியாது என்றே தோன்றுகிறது!.. இப்போது நாம் செல்லும் போது ஸ்ரீபுரத்தில் அவரைப் பற்றி விசாரித்து வர தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விம்மினாள்'


‘பிரியவாதினி!.. நானே அதை மனதில் நினைத்திருக்கிறேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்!..' என்றார் மதங்க முனிவர்.


காஞ்சி அரண்மனையில் நடனக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தன. பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மர் மதங்க முனிவருக்கும், அவருடைய சிஷ்யர்களுக்கும் எல்லா வசதியும் செய்து கொடுத்திருந்தார். அரசாங்க அதிகாரிகள் எல்லோரும் நன்றாக உபசரித்து, பணிவிடை செய்யக் காத்திருந்தார்கள்.


பிரியவாதினியின் மனம், எப்பொழுதும் ஸ்ரீபுரத்தில் உள்ள குணசேனனையே சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.


கலை நிகழ்ச்சிகள் தொடங்கிய முதல் நாள் பிரியவாதினி நடனமாடிய போது அவளுடைய கண்கள் மக்கள் கூட்டம் நிரம்பிய அந்த மண்டபத்திலும், மற்ற காஞ்சிநகர் கலைஞர்கள் மத்தியிலும் குணசேனனையே தேடி அலைந்தன. பத்து நாட்கள் நடந்த வசந்த விழாவிலே பத்துநாட்களும் சக்கரவர்த்தியும் பட்டமகிஷியும் சபையில் வந்தமர்ந்து நடனங்களை ரசித்தார்கள். பிரியவாதினிக்கு ஏக்கம் தான் மிஞ்சிற்று!


மதங்கர் இரண்டு சீடர்களை ஸ்ரீபுரத்திற்கு அனுப்பி குணசேனனைப் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தார். ஆனால் அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.


இந்த விழாக்களின் கடைசிநாளில் மதங்க முனிவருக்கு பல்லவச் சக்கரவர்த்தி சன்மானங்கள் கொடுத்து விசேஷமாய் கௌரவித்ததோடு அவருடைய சிஷ்யர்கள் யாவருக்கும் தனித்தனியாக பரிசுப் பட்டாடைகளையும், பொற்கிழிகளையும் வழங்கினார். ஆனால் அப்போது பிரியவாதினியை மட்டும் காணவில்லை.


மதங்க தேவர் அரண்மனை விடுதிக்குத் திரும்பியதும் மிகவும் கவலையுற்றவராய் பிரியவாதினியைத் தேடி அழைத்து வருவதற்கு சீடர்களை அனுப்பினார்.


எங்கு தேடியும் பிரியவாதினி அகப்படவில்லை.


(தொடரும்)



Saturday, August 22, 2009

பிரியவாதினி - பூரம் சத்தியமூர்த்தி

79 வயதாகும்   பூரம் சத்தியமூர்த்தி  அவர்கள் ஒரு சிறந்த சிறுகதை ஆசிரியர். கலாரசனை மிக்கவர். தற்போது முற்றிலும் பார்வை இழந்த நிலையிலும் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வருகிறார். (அவர் சொல்லச் சொல்ல நண்பர்கள் எழுதி வருகின்றனர்). 1960களில் எழுதி அவர் பரிசு பெற்ற சிறுகதைகளுள் ஒன்று இங்கே...
அவரைப் பற்றிய விவரங்கள் இங்கே...
 
- - - - - **********************************************************************************
பிரியவாதினி
பாண்டிய நாட்டின் வடமேற்கு எல்லையில் நந்திமலைச் சாரலில் வசந்த காலத்தில் ஒருநாள் காலை நேரம்! அங்கே பாறையைப் பின்னணியாகக் கொண்டு நீண்ட சதுர வடிவத்தில் ஒரு மண்மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மண்மேடையில் ஒருபுறம் பதினைந்து இளங்குமரிகள் நடன உடை தரித்து அஞ்சலி முத்திரையுடன் கண்களை மூடித் தியானத்தபடி நாட்டியத்திற்குச் சித்தமாக நின்றார்கள்! இன்னொருபுறம் பதினைந்து இளங்குமாரர்கள் அதே போல் சித்தமாக நின்றார்கள்! அவர்களுக்கெதிரே ஆசனம் போன்று அமைந்து ஒரு பாறை மேல் மதங்க முனிவர் தியானம் செய்தபடி அமர்ந்திருந்தார். அவருக்கு இடதுபுறத்தில் தரையில் நான்கு இளம்பெண்கள் இசைக்கருவிகளுக்கு ஸ்ருதி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்கு வலது புறத்திலே சில பார்வையாளர்கள் வந்து அமர்ந்திருந்தார்கள். அவர்களிலே இரண்டு இளைஞர்கள் புதுமுகங்களாகத் தென்பட்டார்கள்!

யாழின் மெல்லிய இசை ஸ்ருதியை இழைத்தது.

மதங்கதேவர் ஒரு ஜதிஸ்வரத்தைப் பாடத் தொடங்கினார்.

‘ஸா, தாபாம கா ப ரிக பாம கரீ
கரீ ஸாரிஸா தத ஸா ரீ கா பா பதரீஸா
ஸா ரி கா பபத ரி....'

அந்த வித்யார்த்திகள் மிகவும் சுறுசுறுப்பாக தாளக்கட்டு விடாமல் நடனம் செய்தார்கள்!

பெண்கள் பகுதியில் முன்னால் நின்றிருந்த ஓர் அழகிய இளங்குமரி மிகச்சிறப்பாக ஆடி அடவுகளைத் தெளிவாக அபிநயித்தாள்! சிலர் தவறு செய்யும் பொழுது மதங்கர் இடைமறித்து, அந்தப் பெண்ணை மறுபடி ஆடச் செய்து மற்ற வித்யார்த்திகளும் அதைக் காணும்படிச் செய்தார். இதற்குப் பிறகு சில சித்தர் பாடல்களை ஒவ்வொருவரும் தனித்தனியாக அபிநயித்துக் காட்டினார்கள்.

இப்படி அந்த நடனப்பயிற்சி ஏறத்தாழ ஆறு நாழிகைகள் நடைப்பெற்றன. பின்னர் அது முடிந்ததற்கு ஆசார்யர் ‘சமிக்ஞை' செய்யவே வித்யார்திகள் ஒவ்வொருவரும் வந்து தனித்தனியாக அவரை வணங்கி விட்டுச் சென்றார்கள். பெண்களின் முதன்மையாக நின்ற அந்த இளம்பெண் மிகவும் அடக்கத்துடன் ஆசார்யர் முன் வந்து வணங்கி எழுந்து விநயமாகத் தெரிவித்தாள்!

‘ஆசார்யதேவரே! தங்களை நமஸ்கரிக்க இரண்டு புது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள்!'

மதங்கர் கண்களைத் திறந்து பார்த்தார்.

அந்த இரண்டு இளைஞர்களும் முன்னால் வந்து சில பழங்களை அவர் முன் ஒரு தட்டில் வைத்து விட்டு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து ‘அபிவாதநம்' சொன்னார்கள்.

‘ஆசார்யதேவா! நாங்கள் இருவரும் பல்லவ நாட்டைச் சேர்ந்தவர்கள்!.. காஞ்சிக்கு அருகே உள்ள ஸ்ரீபுரத்திலிருந்து வருகிறோம்!... என் பெயர் ‘குணசேனன்'. இவன் என் நண்பன் ‘வித்யாதரன்'! நாங்கள் இருவரும் காஞ்சியில் சிலகாலம் நடனமும், இசையும் பயின்றவர்கள்... இந்தக் கலையை விருத்தி செய்து கொள்வதற்காக தங்கள் திருவடியை தஞ்சம் அடைந்திருக்கிறோம்... எங்களுக்கு அநுக்ரஹிக்க வேணும்!...'

‘நீங்கள் இருவரும் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்?..'

‘ஸ்வாமி... நாங்கள் இருவரும் க்ஷத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.. அடியேன் கொஞ்சம் ‘சாமகானம்' ‘அத்யயனம்' செய்திருக்கிறேன்.

‘மகிழ்ச்சி, நீங்கள் இருவரும் எந்த ஆசாரியரிடம் நடனமும் இசையும் பயின்றீர்கள்...'

‘குலபதி ஆசார்யர் ருத்ராசாரியாரிடம் பயின்றிருக்கிறோம்..'

‘ஆஹா... அவரிடம் தான் அடியேன் சிறுவயதிலே பாடம் பயின்றேன். அவருடைய ஆக்ஞையின் பேரில் தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்திமலைச் சாரலில் குருகுலத்தை அமைத்துக் கொண்டேன். அவர்தான் எப்பேர்பட்ட மகாபுருஷர்... அவர் சுகமாக இருக்கிறாரா?...

‘ஸ்வாமி, அவர் ‘காலகதி' அடைந்து இரண்டாண்டுகள் ஆகி விட்டன. அவர் தான் கடைசித் தறுவாயில் தங்கள் பெயரைச் சொல்லி, தங்களிடம் எங்கள் ஞானத்தை விருத்தி செய்து கொள்ளுமாறு பணித்தார்.'

'அப்படியா, நீங்கள் இருவரும் குருகுலத்திலே தங்கிப் பாடம் கேட்கலாம்'

இளைஞர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

‘தீர்காயுஸ்மான் பவா!.. பிரியவாதினி இந்த பிரம்மச்சாரிகளை நம்முடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாயாக!..”

'அப்படியே ஆகட்டும் ஸ்வாமி...' என்று அந்த இளநங்கை நமஸ்கரித்து எழுந்தாள்.

பிரியவாதினி அந்த இரண்டு இளைஞர்களையும் மிகவும் பணிவுடன் அழைத்துச் சென்றாள். அந்த இடத்திலிருந்து அரை நாழிகை தொலைவில் மதங்கருடைய ஆஸ்ரமம் தென்பட்டது. அதை ஒட்டி பல குடில்கள் இருந்தன. ஒருபுறம் இளங்குமரர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபுறம் இளம்பெண்களோடு சற்று வயது முதிர்ந்த தாதிமார்களும் பலவித அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள். அகன்று பரந்த ஆஸ்ரமத்திலே அமைந்த நடுமுற்றத்தில் ‘ கார்ஹ பத்ய', ‘ஆன்வாஹார்யபசன', ‘ஆஹவனீய' ஆகிய மூன்று அக்னிகுண்டங்கள் லேசாகப் புகையை எழுப்பிக் கொண்டிருந்தன. வேதம் பயிலும் வித்யார்த்திகள் சிலர் அந்த அக்னியிலே ஹோமம் செய்து கொண்டிருந்தார்கள். ஆஸ்ரமத்திற்கு பின்புறத்தில் பசுக்கள் கட்டப்பட்ட கொட்டில்களில் சில பிரம்மச்சாரிகள் பசுக்களை பராமரித்தார்கள். பெண்கள் பகுதியில் ஒரு பகுதியினர் பகல் உணவிற்காக பழங்களையும், காய்கறிகளையும் நறுக்கிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த தாதிமார்கள் பெண்களுக்கு அலங்காரம் செய்வதிலும், நகைகளை எடுத்துக் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

குணசேனையும், வித்யாதரனையும் பிரியவாதினி மிகவும் பணிவுடன் ஒரு குடிலுக்கு அழைத்துச் சென்றாள். ‘ஸ்வாமி.. நீங்கள் இருவரும் இந்தக் குடிலில் தங்கிக் கொள்ளலாம்.. அங்கே ஒரு மண் பானையில் சுத்தமான நீர் இருக்கிறது. உங்கள் இருவருக்கும் எது தேவையானாலும் என்னிடம் தெரிவித்துக் கொள்ளலாம். இந்த அடியவள் அதை நிறைவேற்றக் காத்திருப்பாள்.'

குணசேனன் அவளுடைய பணிவையும் ‘அதிதி சத்கார'த்தையும் கண்டு மிகவும் வியந்து போனான். ‘பிரியவாதினி மிகவும் நன்றி'...

அப்போதுதான் குணசேனன் அவளுடைய அழகிய முகத்தை நேருக்கு நேர் கண்டான். ‘ஆஹா, இவள் தான் எவ்வளவு அழகிய பொற்கொடியாக இருக்கிறாள்! இவளுடைய அங்க அசைவும், சொல்லழகும் தான் எவ்வளவு நளினமாக இருக்கின்றன!'

‘.... தங்களுக்குத் தேவையான நடன ஆடைகளும் சதங்கைகளும் நான் கொண்டு வந்து தருகிறேன்.. சரியாக பதினைந்து நாழிகைக்கு ஆராதனை முடிந்து ஆரத்தி ஆனபின் ஆசார்ய தேவரோடு எல்லோருக்கும் பிக்க்ஷை அளிக்கப்படுகிறது. நீங்கள் அங்கே சித்தமாக வந்து விடலாம்!...'

'பெண்ணே! உன் உபசாரங்களையும் தெளிவான பேச்சையும் கண்டு மிகவும் வியக்கிறேன்... இந்த ஆஸ்ரமமே காளிதாசன் வர்ணித்த கன்வ மகரிஷி ஆஸ்ரமம் போல் காட்சியளிக்கிறது... அங்கே வாழும் சகுந்தலையாக நீ தோன்றுகிறாய்!...'

பிரியவாதினி மெல்லப் புன்னகை புரிந்தாள். அவள் கன்னங்கள் இரண்டிலும் லேசாக செம்மை படர்ந்தது.

(தொடரும்)