இராமன் மானுடனா அல்லது அவதார புருடனா? இது எல்லோருக்கும் எழும் ஐயம். ஒரு அவதாரபுருடன் என்றால் ஏன் அவன் சீதையைத் தொலைத்ததற்கு (கவனிக்க- தொலைத்ததற்கு) அவ்வாறு கலங்க வேண்டும்? மனம் மயங்கி வசனங்கள் பேச வேண்டும்? மாயையால் தாக்குண்டானோ? அங்ஙனமாயின் அவன் எவ்வாறு அவதார புருடனாக முடியும்? சாதாரண மானுடனாகத் தானே இருக்க முடியும்?
இது கம்பராமயணத்தைப் படிக்கும் போது பல இடங்களில் தோன்றும் ஐயம்.
அவதார புருடன்
சரி உண்மையிலேயே இராமன் அவதார புருடன் தானா அல்லது மானுடனா? கம்பர் என்னதான் சொல்லியிருக்கிறார்?
கம்பர் காலத்தில் சைவ வைஷ்ணவச் சண்டைகள் அதிகம். மகாவிஷ்ணு பிறந்து பிறந்து இறந்து கொண்டே யிருப்பதால், அவர் கடவுளல்லர் என்பது சைவர்கள் கருத்தாக இருந்தது. கிணற்றிலே விழுந்த குழந்தையை எடுப்பதற்காகத் தானும் அக்கிணற்றிலே குதித்து மூழ்கும் தாயைப் போல, கடவுளும் மனிதர்களைக் கரையேற்றும் பொருட்டுக் கீழே இறங்குகிறார். ஆகவே மக்கள் நலம் காக்க பல்வேறு அவதாரங்கள் எடுக்கும் மகாவிஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்பது வைஷ்ணவர்கள் கருத்து.
இராமன் கடவுளா, மனிதனா என்பதற்கு ஒரு அற்புதமான ஒரு தீர்ப்பைச் சொல்கிறார் கம்பர்.
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னேர்
ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே
கம்பர்
இராமன் அவதரித்தால், அது விஷ்ணுவுக்குப் பெருமையாகாது; வேறு வேறு தேவர்களுக்கும் பெருமை தராது. இராமன் மனிதனாகப் பிறந்ததால் தெய்வப் பிறப்பு முதலியவற்றையெல்லாம் இம் மனிதப்பிறப்பு வென்று விட்டது என்கிறார் கம்பர். இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்பது கருத்து. அதாவது மனிதனாகப் பிறந்த இராமன் தெய்வங்களுக்கெல்லாம் மேலானவன் என்பது அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து. எல்லா தெய்வங்களுக்கும், எல்லா தேவர்களுக்கும், எல்லா அவதாரங்களுக்கும் மேலானவன் ராமன் என்கிறார் கம்பர். உண்மைதான் இல்லையா?