Showing posts with label தமிழ்க்கவிதை. Show all posts
Showing posts with label தமிழ்க்கவிதை. Show all posts

Friday, October 29, 2010

முரண்


உடல் வருடும்
தென்றல்!

மணம் வீசும்
காட்டுப்பூ!

சலசலக்கும்
நீரோடை!

செவி வருடும்
பறவை ஒலி!

வேகும் பிணத்துடன்
வெட்டியான்!

Monday, October 25, 2010

எண்ணப் போலிகள்


ஓயாத முத்தங்களாய்
ஒளியப் பார்க்கும் சப்தங்களாய்

வெப்பப் பெருமூச்சொடு
வியர்வைக் கசகசப்பாய்

விடுதலை மேனியொடு
சிறை புகுந்து மீண்டு

சிலிர்த்துக் கிடைக்கையிலே
சிந்தனையில் இடறுது..

டைப்பிஸ்ட் மல்லிகா
நாளை
அணிந்து
வரப்போவது
சுடிதாரா
புடைவையா..
என்பது

Friday, December 18, 2009

கவிதை-2


இரை கவ்வும் நண்டைப் போல
ஏதோ ஓர் அவஸ்தை
என் கவிதையைக் கவ்வி இருக்கிறது

முதல் இரவுப் பெண்ணின்
முதல் சுக வேதனை போல்

விட்டு... விட்டு...
விட்டு... விட்டு...

மெல்லவும் முடியாமல்...
விழுங்கவும் முடியாமல்...

பிரசவிக்கும் முன்னேயே
பிறழ்ந்து விட்ட கவிதையினை
நாய் தன் குட்டியை உண்ணுவது போல்
விழுங்கிக் கொண்டிருக்கிறேன்
எனக்குள்ளாகவே!

Friday, December 11, 2009

கவிதை

தேடல்...

விசில் ஊதிக் கொண்டே
செல்லும்
கூர்க்கா அறிந்திருப்பானா..
தன் குடும்பத்தினரின்
உறக்கத்தை..

நிவேதனம் செய்யும்
பூசாரிக்குத் தெரியுமா..
தன் குடும்பத்தின் பசி…

காத்திருக்கும்
கொக்கு
அறிந்திருக்குமா..
மாட்டப்போவது
மீன் தானா என்று..

பாலியல் பெண்
அறிவாளா..
அடுத்து வருபவன்
இளைஞனா
வயதானவனா
என்று..

விளைவு அறியாத விழைவுடன்
விரைந்து செல்லும்
ஆம்புலன்சைப் போல..
விடை தெரியாத
கேள்விகள் ஊடே
தினமும் நகர்ந்து கொண்டிருகிறது
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமாய்.