Showing posts with label டயரிக் குறிப்பு. Show all posts
Showing posts with label டயரிக் குறிப்பு. Show all posts

Monday, August 16, 2010

சர்மாவின் டைரிக் குறிப்பு...



1. கம்பன் பிறந்த நாள் 06.02.0886 புதன்கிழமை

2. A. சேஷய்யா சாஸ்திரி பிறப்பு 22.03.1828 சனிக்கிழமை

3. சுபானு புரட்டாசி-21, ஞாயிறுக் கிழமை, 05.10.1823  இராமலிங்கம் பிறப்பு.

   ஸ்ரீமுக தை 19, வெள்ளிக்கிழமை, 30.01.1874, இரவு 12 மணியில், கடகமதி, மகர பாநு, பூசத்தில், இராமலிங்க சுவாமி வடலூர் மேட்டுக் குப்பத்தில், திருவளாக மாளிகை அறையில், திருக்காப்பிட்டுக் கொண்டு மறைவு.

4. தமிழ் நாடகாசிரியர் T.T. சங்கரதாஸ் சுவாமி பிறப்பு ஆவணி மாதம், 22ஆம் தேதி, சனிக்கிழமை,07.09.1867.

 இறப்பு 13.11.1922 திங்கள்.

5. 18.08.1968 கணித மேதை சகுந்தலா தேவி, கல்கத்தா பானர்ஜியை மணந்தார்.

6. உவச்சர் குலத்தில் தோன்றியவன் கம்பன். சோழனின் வஞ்சனையால் மகன் தனை இழந்து, இனிக் கால் மிதிப்பதில்லை என்ற வைராக்கியத்தில் சோழ தேசம் விட்டேகி, பாண்டிய தேசம் வந்தனன். நாட்டரசன் கோட்டையிலே அவன் தஞ்சம் புக, அவன் வழிபடு கடவுளாம் வாணி, காளியாய் ஆங்கே வந்தமைந்திட்டனள். அதுவே ஸ்ரீகண்ணுடை நாயகியாள் ஆலயமாம்.

பிரிவுத் துயரிலே காலம் தள்ளிய அவன் அம்பிகாபதியின் மறைவுக்குப் பின் ஏது இலக்கியமும் செய்தானில்லை. துயரத்தில் வெந்து மடிந்த அவன் தன் சமாதியும் ஆங்குண்டு. இன்னமும் அவன் குலத்தவரே ஆங்கே பூசனை செய்கின்றனர். 

"பைம்பொற் சிலம்பணிந்து பாடகக் கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்தி சேல்விழிக்கு மையெழுதி"

   என அழுகுனிச் சித்தர் பாடுவது இந்த அம்மையையே! அவர் தம் ஜீவ சமாதியும் இக்கோயிலில் உண்டு.

7. அம்பிகாபதி, அமராவதியின் சமாதி, புதுக்கோட்டை சமஸ்தானத்திலே, அன்னவாசல் என்ற ஊருக்கு அருகில் உள்ள, பெரிய பாழுங்கிணற்றை ஒட்டிய தோப்பினிலே உள்ளது.  தரையோடு தரை ஒட்டிய, கேணிக்கு மூடி போல் போட்டு மூடப்பட்ட, அதனை அறிவார் யாருமில்லை ஆங்கே. 

8. ராக்காயி கோயில் என்பது, அழகர்மலையில், பழமுதிர்ச் சோலையின் மேலுண்டு. நூபுர கங்கையின் அடித்தளத்திலே அமைந்திட்ட அக்கோயில் சிலாரூபம் உண்மையில் காளியன்று. கண்ணகியே! மதுரைக்கு வருமுன், ஈண்டு வந்து மாநகர் எல்லையான சிலம்பாற்றங்கரையிலே தங்கி இளைப்பாறினர் கண்ணகியும் கோவலனும். பின்னர் நடந்த நிகழ்வால் சீற்றம் கொண்ட கண்ணகி, மதுரையை எரித்த பின், இவ்விடம் வந்தே கோவலனுடன் வானேகினள். அதனைக் கண்ட வேட்டுவர்கள், கண்ணகியை வழிபட்டுக் கோயில் சமைத்தனர். எனவே கண்ணகியின் கோயிலே அஃதாம். 

ஒரு காற்சிலம்பு மட்டுமே அச் சிலாரூபம் கொண்டிருப்பதே அதற்குச் சாட்சியாம்.

9. வேங்கட மலையில் எழுந்தருளியிருக்கும் சிலா ரூபம் விட்டுணு அன்று என்றும், தசாவதாரத்தில் எந்த அவதாரமும் அதுவன்று, உண்மையில் ஸ்ரீ சுப்ரமண்யரே அங்கு இருப்பது என்றும், பின்னோர் அதனை மாற்றி பெருமாளாக்கி விட்டனர் என்றும் சிலர் கூறும் கூற்று உண்மை என்பதற்கான வலுவான ஆதாரம் ஏதும் இதுவரை கிடைத்திலது. ஆயினும் பி. ஸ்ரீ. ஆச்சார்யாவின் விகடன் கட்டுரை ஈண்டு சிந்திக்கற்பாலதே.

எனினும் வள்ளியும், தெய்வானையும், முருகனும் வேலும் எங்கே போயின என்பதை அக்கட்டுரை விரிவாக விளக்கின் நலம் பயக்கும்.

10. தேவர் மலை என்று ஈண்டு ஓர் மலையுண்டு. அம்மலையில் ஜீவ சமாதியாய் இருப்போர், சிற்றரசராய் விளங்கிய பெருமிழலைக் குறும்ப நாயனார். தம்பிரான் தோழருக்கும், சேரமானுக்கும் தோழர்.

இம்மலைபற்றி, "காக்கை மூக்கு நிழலிலே கலம் பொன்" என்று பெரியோர்கள் கூறக் கேட்டதுண்டு. இம்மலையின் உச்சி காக்கையின் மூக்குப் போன்று இருக்கும் என்றும், அதன் நிழல் வீழும் இடத்திலெல்லாம் கலம் பொன் புதையல் இருப்பதாகவும் ஐதீகம்.

ஆனால் நிழல், எப்பொழுது, எந்தெந்த இடத்தில், எந்தெந்த நேரத்தில் விழும், அதிலே எவ்வெவ்விடத்திலே புதையல் உண்டு என்பதை இது காறும் யாரும் அறிந்திலார்.

பங்குனி 16, விரோதிகிருது, 7.00 pm, 29-03-1972